தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலைக்கு ‘மேலிடம்’ கல்தா கொடுக்க முடிவு செய்திருக்கிறதாம். அதே சமயம் ‘சாதி’ ரீதியாகவும் ஒரு கணக்குப் போட்டு காய்நகர்த்தி வருகிறதாம் பி.ஜே.பி. மேலிடம்!
தமிழக சட்டசபை தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெறும் நிலையில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் மீண்டும் அதிமுக இணைய இருக்கிறது. டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை அண்மையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக குழு சந்தித்து பேசியது. இதனைத் தொடர்ந்து அதிமுகவுடன் பாஜக கூட்டணிப் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக மத்திய அமைச்சர் அமித்ஷா அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.
அதேநேரத்தில் அண்ணா திமுக தரப்பில், இதுபோன்ற உறுதியான எந்த தகவலும் தெரிவிக்கப்படாமலேயே இருந்து வருகிறது. இந்த நிலையில் டெல்லி சென்ற தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, மத்திய அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து பேசினார். அண்ணா திமுக மீண்டும் பாஜக கூட்டணியில் இணைவது தொடர்பாக நடைபெற்ற இந்த ஆலோசனையில், தமிழக பாஜக தலைவர் பதவியில் இருந்து அண்ணாமலையை பதவி விலக அமித்ஷா கேட்டுக் கொண்டதாக கூறப்படுகிறது.
அண்ணா திமுகவுடனான கூட்டணியை முறித்தது, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை ஒருமையில் இழிவாக விமர்சித்தது உள்ளிட்டவைகளால் அண்ணாமலை மீது அதிமுக தரப்பு கடும் கோபத்தில் இருந்தது. இதனைத் தணிக்கும் வகையில் அண்ணாமலையை, தமிழக பாஜக தலைவர் பதவியில் இருந்து விலக டெல்லி மேலிடம் உத்தரவிட்டுள்ளது.
மேலும் தமிழக பாஜகவின் புதிய தலைவராக, தென் தமிழ்நாட்டைச் சேர்ந்த நயினார் நாகேந்திரனை நியமிக்கவும் டெல்லி பாஜக மேலிடம் முடிவு செய்துள்ளதாம். நயினார் நாகேந்திரன், அதிமுகவில் இருந்து பாஜகவுக்கு வந்தவர். பாஜக கூட்டணியில் அதிமுக இடம் பெறுவதால், இரு கட்சிகளிடையே நயினார் நாகேந்திரன் சுமூகமான உறவை முன்னெடுத்துச் செல்வார் என்பது டெல்லி மேலிடத்தின் நம்பிக்கையாம்.
அத்துடன் தமிழக பாஜக தலைவர் மாற்றத்தில் பாஜகவின் டெல்லி மேலிடம் இன்னொரு ஜாதி கணக்கையும் போட்டு வைத்திருக்கிறதாம். மேற்கு மண்டலத்தில் அதிமுக, பாஜகவுக்கு கணிசமான வாக்குகள் உள்ளன. அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, அண்ணாமலை இருவருமே கொங்கு வேளாள கவுண்டர் ஜாதியைச் சேர்ந்தவர்கள்தான். அண்ணாமலை பதவியை பறித்தாலும் கொங்கு வேளாள கவுண்டர் ஜாதி வாக்குகள், இந்த கூட்டணியை விட்டு வெளியேறாது என்ற நம்பிக்கை இருக்கிறதாம்.
தென் தமிழ்நாட்டில் அதிமுக, பாஜக இரு கட்சிகளுக்குமே வாக்கு வங்கி கிடையாது. கன்னியாகுமரி பகுதியில் மட்டும்தான் பாஜகவுக்கு செல்வாக்கு உள்ளது. அதிமுகவின் வாக்கு வங்கியாக இருந்த தேவர் ஜாதி வாக்குகளை டிடிவி தினகரன், ஓபிஎஸ் இருவரும் தங்கள் பக்கம் திசை திருப்பி வைத்துள்ளனர். இதனால் தென் தமிழ்நாட்டில் பாஜக, டிடிவி தினகரனின் அமமுக-, ஓபிஎஸ், அதிமுக உள்ளடங்கிய கூட்டணிக்கு பெரும்பான்மை தேவர் ஜாதி வாக்குகளை உறுதி செய்ய வேண்டிய கட்டாயம் இருக்கிறது.
இதற்காகவே தென் தமிழ்நாட்டின் தேவர் ஜாதியை சேர்ந்த நயினார் நாகேந்திரனை, தமிழக பாஜக தலைவராக்குவது எனவும் டெல்லி மேலிடம் முடிவு செய்துவிட்டதாம். இனிவரும் நாட்களில் அண்ணாமலை ராஜினாமா அல்லது நீக்கம், நயினார் நாகேந்திரன் நியமனம் உள்ளிட்ட அதிரடியான அறிவிப்புகள் வெளியாகக் கூடும் என்கின்றன பாஜக வட்டாரங்கள்.
அமித் ஷாவின் ‘சாதி’ கணக்கு தமிழகத்தில் எடுபடும் என்ற நம்பிக்கையில் இருக்கிறது பா.ஜ.க. மேலிடம்.-.!