அ.தி.மு.க.வில் சீனியரும், முன்னாள் அமைச்சருமான கே.ஏ.செங்கோட்டையன் பி.ஜே-.பி.யின் துருப்புச் சீட்டாக மாறியதுதான் எடப்பாடி பழனிசாமிக்கு மீண்டும் ‘தலைவலி’யை ஏற்படுத்தியிருக்கிறது.

தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல் நடைபெற இன்னும் ஓராண்டுகள் உள்ள நிலையில், தற்போதே தமிழக அரசியல் களத்தில் பரபரப்பு தொற்றிக் கொண்டது. ஏற்கனவே, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கும் அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனுக்கும் இடையேயான பனிப்போர் கொஞ்சம் கொஞ்சமாக வெளிப்படும் சூழலில், தற்போது அது மேலும் தீவிரமடைந்து வருகிறது.

செங்கோட்டையன் தொடர்ந்து கட்சி கூட்டங்களை புறக்கணித்து வருவதும், தன்னிச்சையாக இத்தகைய பயணங்களை மேற்கொள்வதும் அதிமுகவில் உட்கட்சி பூசலை மேலும் தீவிரமாக்கலாம் என்று அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது. இது ஒரு புறம் இருக்க, அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட ஓபிஎஸ், சசிகலா ஆகியோரை மீண்டும் இணைக்க இபிஎஸ் மறுப்பு தெரிவித்து வருகிறார்.

இதனால், செங்கோட்டையனை வைத்து அவர்களைக் கட்சியில் இணைக்க பாஜக முயல்வதாக கூறப்படுகிறது. தமிழகத்தில் மீண்டும் அ.தி.மு.க – பா.ஜ கூட்டணி உருவாகும் என தகவல் வெளியாகி உள்ள நிலையில், கடந்த சில நாள்களுக்கு முன்பு ரகசியமாக டெல்லி சென்று திரும்பிய அவர், இன்று மீண்டும் டெல்லி சென்று அமித்ஷாவை சந்திக்க உள்ளதாகக் கூறப்படுகிறது.

செங்கோட்டையன் கடந்த 29ம் தேதி டெல்லி சென்றபோது, அங்கு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உள்ளிட்டோரை சந்தித்து பேசினார். ஆனால், இது தொடர்பாக செங்கோட்டையன் தரப்பிலோ, மத்திய அமைச்சர்கள் தரப்பிலோ, எந்தவிதமான அறிவிப்போ, புகைப்படமோ வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தவிர, ‘கடந்த நாடாளுமன்றத் தேர்தலின் போது பி.ஜே.பி.யுடன் கூட்டணி எனக் கூறிய எடப்பாடி பழனிசாமி மோடியின் அருகில் நின்ற புகைப்படமும் வெளியானது. ஆனால், அதன் பிறகு சென்னை வந்தவுடன் ‘பா.ஜ.க.வுடன் கூட்டணி கிடையாது’ என அறிவித்து விட்டார் எடப்பாடி.

இந்த நிலையில்தான், எடப்பாடி பழனிசாமியை நம்மாத அமித்ஷா, செங்கோட்டையன் மூலமாக சில ‘ஆபரேஷன்’களை ஆரம்பிக்க ஆயத்தமாகிவருகிறாராம். இந்தப் பின்னணியில்தான் செங்கோட்டையன் டெல்லி செல்லவிருக்கிறார்’ என்றனர் விஷயமறிந்தவர்கள்!

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal