விழுப்புரம் மாவட்ட திமுக-வை மூன்றாக பிரித்திருக்கும் திமுக தலைமை, புதிதாக பிறந்திருக்கும் விழுப்புரம் மத்திய மாவட்ட திமுக-வுக்கு அதிமுக-விலிருந்து வந்த லட்சுமணனை பொறுப்பாளராக்கி இருக்கிறது. 2021-ல் விழுப்புரம் தொகுதியில் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகத்தை தோற்கடித்தவர் இந்த லட்சுமணன் என்பது கூடுதல் தகவல்.
ஒரு காலத்தில் பாமக இதேபோல் மாவட்டங்களைப் பிரித்து அதிகாரப் பரவலை செய்தபோது அதை பரிகாசம் செய்த கட்சி திமுக. இப்போது அவர்களே பாமக வழிக்குப் போயிருக்கிறார்கள். கள்ளகுறிச்சியை உள்ளடக்கிய ஒன்றுபட்ட விழுப்புரம் மாவட்டத்துக்கும் அமைச்சர் பொன்முடி தான் செயலாளராக இருந்தார்.
சுமார் 12 ஆண்டுகளுக்கு முன்பு நிர்வாக வசதிக்காக விழுப்புரம் மாவட்டத்தை வடக்கு, தெற்கு என இரண்டாகப் பிரித்தது திமுக. அப்போது வடக்கு மாவட்டச் செயலாளராக பொன்முடியும் தெற்கு மாவட்டச் செயலாளராக அங்கயற்கன்னியும் நியமிக்கபட்டனர். பொன்முடி துணைப் பொதுச்செயலாளர் ஆனதும் வடக்கு மாவட்டத்துக்கு மஸ்தானும், தெற்கு மாவட்டத்துக்கு புகழேந்தியும் செயலாளர்களாக நியமிக்கப்பட்டார்கள்.
அண்மையில் உடல்நலக் குறைவால் புகழேந்தி காலமானதால் பொன்முடியின் மகன் கவுதம சிகாமணி தெற்கு மாவட்ட பொறுப்பாளராகவும் மஸ்தானுக்கு பதில் டாக்டர் சேகர் வடக்கு மாவட்ட பொறுப்பாளராகவும் நியமிக்கப்பட்டனர். சேகர் வகித்து வந்த மாவட்ட அவைத்தலைவர் பதவி மஸ்தானுக்கு வழங்கப்பட்டது.
இந்த நிலையில், தேர்தலை குறிவைத்து விழுப்புரம் மாவட்ட திமுக-வை மீண்டும் கலைத்துப் போட்டிருக்கும் திமுக தலைமை, புதிதாக விழுப்புரம் மத்திய மாவட்டம் என்று ஒன்றை உருவாக்கி அதற்கு அதிமுக வரவான லட்சுமணனை பொறுப்பாளராக்கி இருக்கிறது. கூடவே, முன்னாள் அமைச்சரான மஸ்தானை மீண்டும் விழுப்புரம் வடக்கு மாவட்ட பொறுப்பாளராகவும், கவுதம சிகாமணியை தெற்கு மாவட்ட பொறுப்பாளராகவும் அறிவித்திருக்கிறார்கள்.
பல ஆண்டுகளாக விழுப்புரம் மாவட்டத்தை தன் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருந்த பொன்முடி, தற்போது விழுப்புரம் லட்சுமணன் கட்டுப்பாட்டிற்குள் சென்றதை ரசிக்கவில்லை. இதனால், தி.மு.க. தலைமை மீது கடும் அதிருப்தியில் இருக்கிறார். பொன்முடியை சரிகட்டுவதற்குதான் அவருக்கு கூடுதலாக ராஜகண்ணப்பன் வசம் இருந்த கதர் துறை வழங்கப்பட்டிருக்கிறது.
கூடுதல் இலாகா வழங்கப்பட்டாலும் பொன்முடியும், அவரது ஆதரவாளர்களும் அதிருப்தியில் இருக்கின்றனர். இந்த அதிருப்தியை சரிகட்டும் பணியில் இறங்கியிருக்கிறார் ஆ.ராசா!
அதே போல், ஈரோடு மாவட்டம் பெருந்துறையைச் சேர்ந்த அதிமுக முன்னாள் அமைச்சரான தோப்பு வெங்கடாஜலத்திற்கு திமுகவில் மாவட்ட செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டிருக்கிறது. கடந்த சட்டமன்றத் தேர்தல் வரை அதிமுகவில் இருந்த அவர் அதற்கு பிறகு திமுகவில் இணைந்தார். இதை அடுத்து தற்போது ஈரோடு மத்திய மாவட்ட செயலாளராக அறிவிக்கப்பட்டிருக்கிறார். இதற்கு திமுகவினர் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வருவதாக கூறப்படுகிறது.
குறிப்பாக பெருந்துறை ஒன்றிய செயலாளரான கே.பி.சாமி தனது பதவியை ராஜினாமா செய்திருக்கிறார். பெருந்துறையில் தோப்பு வெங்கடாசலத்திற்கு எதிராக பல ஆண்டுகளாக திமுகவினர் அரசியல் செய்து வந்த நிலையில் கட்சியில் தற்போது அவருக்கு மாவட்ட செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தப் பகுதியிலும் சமாதானப் படலம் தொடங்கியிருக்கிறது.