‘தி.மு.க.வில் இணைவதா? அல்லது அ.தி.மு.க.வில் இணைவதா? என்ற குழப்பத்தில் இருந்த பா.ஜ.க. எம்.எல்.ஏ. நயினார் நாகேந்திரனுக்கு அ.தி.மு.க. இணைவதற்கு எடப்பாடி பழனிசாமி தூது அனுப்பியிருக்கிறாராம். இதே சமயம் நெல்லையில் தி.மு.க.வில் உள்ள குழப்பத்தை சரி செய்ய நயினார் போன்ற அரசியல் அனுபவம் வாய்ந்த நபர் தி.மு.க.விற்கு தேவை என ஸ்டாலினும் நினைக்கிறாராம்.
சமீபத்தில், மேடையில் நயினார் நாகேந்திரனை வைத்துக் கொண்டு பிரதமர் மோடி மீது அடுக்கடுக்காக குறை சொன்னார் ஸ்டாலின். ஆனால் நயினார் எதுவுமே எதிர்ப்பு சொல்லாமல் சைலண்ட் மோடில் இருந்தது பாஜகவினருக்கு ஷாக்கை கொடுத்துள்ளது. பாஜகவின் கராத்தே தியாகராஜனே நயினாருக்கு எதிராக கடுப்பாகி பேசியுள்ளார்.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் திருநெல்வேலியில் நலத்திட்ட உதவிகளை தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி ஒன்றில் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் மற்றும் பாஜக எம்.எல்.ஏ நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் பேசிய ஸ்டாலின், “கடந்த 2023 ஆம் ஆண்டு எப்படிப்பட்ட கனமழை பெய்தது என்று எல்லோருக்கும் தெரியும். இந்த கனமழையால் திரு நெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி, தூத்துக்குடி உள்ளிட்ட தென் மாவட்டங்கள் எப்படி பாதிக்கப்பட்டது என்பதும் நமக்கு நன்றாக தெரியும். மத்திய அரசிடம் நிதி கேட்டோம். இடைக்கால நிதியை கூட அவர்கள் கொடுக்கவில்லை” என்ற ஸ்டாலின், “ நயினார் நாகேந்திரன் கோபித்துக்கொள்ள கூடாது. அவருக்கும் உண்மை தெரியும்.ஆனால் அவர் பேசமாட்டார். நீங்கள் பேசுங்கள் என்று தான் எனக்கு அனுமதி கொடுப்பார்” என்று சொன்னார்.
பிரதமரை குறை சொல்லி பேசியதற்கு நயினார் நாகேந்திரனிடம் இருந்து எந்த எதிர்ப்பும் வரவில்லை. பாஜக சட்டமன்ற உறுப்பினரை மேடையில் வைத்துக்கொண்டே முதல்வர் ஸ்டாலின் இவ்வாறு பேசியது பாஜகவினர் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதற்கு நயினார் நாகேந்திரன் எந்த ஒரு எதிர்ப்பும் தெரிவிக்காமல் அமைதியாக இருந்தார். நயினார் செய்தது கொஞ்சம் கூட சரியில்லை என பாஜகவினரே போர்க்கொடி தூக்கி வருகின்றனர்.
பாஜக மாநில செயலாளர் கரத்தே தியாகராஜனும் நயினார் நாகேந்திரனுக்கு எதிராக குரல் கொடுத்துள்ளார். இதுதொடர்பாக பேசிய அவர், ‘‘முதலமைச்சர் ஸ்டாலின் மோடியையும், நிர்மலா சீதாரமனையும் கடுமையாக விமர்சனம் செய்திருந்தார். மேடையில் நயினார் நாகேந்திரனை வைத்துக்கொண்டு முதல்வர் மு.க. ஸ்டாலின் இவ்வாறு பேசியுள்ளார். ஆனால் அதற்கு நயினார் நாகேந்திரன் கண்டனம் கூட தெரிவிக்கவில்லை”என்று தனது ஆதங்கத்தை கொட்டினார்.
இதுபற்றி நயினார் நாகேந்திரன் கூறும்போது, ‘‘இதற்குலாம் கருத்து சொல்ல முடியாது. சபை நாகரிகம் என்று ஒன்று இருக்கிறது” என்று நழுவினார். நயினாரை மீண்டும் அதிமுக பக்கமே கொண்டு வருவதற்காக இபிஎஸ் தூது அனுப்பி வருவதாக சொல்கின்றனர். இந்த நேரத்தில் பிரதமரை முதலமைச்சர் ஸ்டாலின் ரவுண்டு கட்டும் போது நயினார் சைலண்ட் மோடில் இருந்தது தமிழக பாஜக மீது அவருக்கு இருக்கும் அதிருப்தியை காட்டுவதாக சமூக வலைதளங்களில் விவாதிக்கப்படுகிறது.
காரணம், சமீப காலமாக நயினார் நாகேந்திரனுக்கும் பாஜக தலைவர் அண்ணாமலைக்கும் பனிப்போர் நடைபெற்று வருகிறது. ‘அ.தி.மு.க.விற்கு ரெய்டு விட்டு பா.ஜ.க. கூட்டணிக்கு இழுக்க முயற்சி நடக்கிறதா?’ என நயினார் நாகேந்திரனிடம் நிருபர்கள் யதார்த்தமாக கேட்டதற்கு, ‘ரெய்டு எல்லாம் தேவையில்லை, இரு தரப்பிலும் உட்கார்ந்து பேசினாலே போதும்’ என்றார் யதேச்சையாக! ஆனால், அண்ணாமலையோ, நயினார் நாகேந்திரன் மேல் உள்ள கோபத்தில், ‘‘ரெய்டு விடுவதற்கு நயினார் நாகேந்திரனுக்கு அதிகாரம் இல்லை!’’ என்று ஓபனாக பேசினார்.
அடுத்த தலைவர் யார் என்பதிலும் அண்ணாமலை, நயினார் இடையே போட்டா போட்டி நடந்து அதில் அண்ணாமலை தன் பதவியை தக்க வைத்துக்கொண்டார். இதனால் அதிருப்தியில் இருக்கும் நயினார் நாகேந்திரன் அ.தி.மு.க.வில் இணைவதா? அல்லது தி.மு.க.வில் இணைவதா? என்ற குழப்பத்தில் இருக்கிறார் என்கிறார்கள் தமிழக அரசியல் பார்வையாளர்கள்!