தமிழகத்தில் மணல் குவாரிகள் மூடப்பட்டு இருப்பதால் மணல் தட்டுப்பாடு ஏற்பட்டு, எம்.சாண்ட் விலை விண்ணை தொட்டு வருகிறது. இதனால், ஏழை மற்றும் நடுத்தர குடும்பத்தினரின் சொந்தமாக வீட்டு கட்டும் கனவு கானல் நீராகியிருக்கிறது.
இந்த நிலையில்தான், தமிழ்நாடு அனைத்து மணல் லாரி உரிமையாளர்கள் நல சங்கம் சார்பில், மணல் குவாரிகளை உடனே திறக்க வேண்டும், என்று திருச்சியில் உள்ள நீர்வளத்துறை தலைமை பொறியாளர் அலுவலகத்தில், கோரிக்கை மனு அளித்தனர். இது குறித்து, சங்கத் தலைவர் வேலு, துணைத் தலைவர் சாகுல் ஹமீது, செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, துணை செயலாளர் சங்கர் ஆகியோர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
‘‘தமிழகம் முழுவதும் இயங்கி வந்த அரசு மணல் குவாரி மற்றும் கிடங்குகளில் முறைகேடு நடந்துள்ளதாக, கடந்த 2023ம் ஆண்டு செப்டம்பர் மாதம், அமலாக்கத் துறையினர் சோதனையிட்டனர். அதன் பின், அனைத்து அரசு மணல் குவாரிகளும், கிடங்குகளும் இயக்கப்படாமல், நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இதனால், 20,000க்கும் மேற்பட்ட மணல் லாரிகள் மற்றும் 5,000க்கும் மேற்பட்ட மாட்டு வண்டிகளும் வேலை இழந்துள்ளன.அதை நம்பி உள்ளவர்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. குவாரிகள் இயங்காததால், கட்டுமானப் பணிகளுக்கு மணல் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
இதை சாதகமாக பயன்படுத்தி, எம்.சாண்ட், பி.சாண்ட் போன்ற செயற்கை மணலை, மிக அதிக விலைக்கு விற்பனை செய்து வருகின்றனர். எங்களது வாழ்வாதாரத்தை பாதுகாக்க, தமிழக அரசு அறிவித்துள்ள 13 மணல் குவாரிகளையும் உடனடியாக திறக்க வேண்டும்’’ இவ்வாறு அவர்கள் கூறினர்.
பொதுமக்கள் சிலரிடம் பேசினோம். ‘‘சார், மணல் குவாரிகள் மூடப்பட்டு இருப்பதால் எம்.சாண்ட் விலை விண்ணைத் தொட்டிருக்கிறது. ஏழை மற்றும் நடுத்தர குடும்பத்தினரின் வீடு கட்டும் கனவு நனவாக வாய்ப்பில்லை. ஆற்று மணலில் வீடு கட்டினால்தான் எங்களுக்கு திருப்திகரமாக இருக்கும். காரணம், எங்களது முன்னோர்கள் ஆற்று மணலில்தான் வீடுகட்டி வாழ்ந்து வந்தனர். தற்போது ஆற்று மணல் தட்டுப்பாட்டில், எம்.சாண்ட்டுக்கு மாறிவேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்கிறது. சில இடங்களில் எம்.சாண்ட்டும் தரமாக கிடைக்காததுடன், விலையையும் கிடுகிடுவென உயர்த்தி வருகிறார்கள்.
எனவே, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழகத்தில் ஏற்பட்டுள்ள மணல் தட்டுப்பாட்டை போக்குவதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும். அப்போதுதான் ஏழைகளின் வீடுகட்டும் கனவு நனவாகும்’’ என்றனர்.