தமிழக அரசு 13 மணல் குவாரிகளை திறக்க அனுமதிக்கமாட்டோம் என்று முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி, சென்னை, புறநகர் மாவட்டங்களில் நடைபெற உள்ள களஆய்வு பணிகள் குறித்து, மாவட்ட செயலாளர்களுடன் சென்னையில் நேற்று ஆலோசனை நடத்தினார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஜெயக்குமார், ‘‘ தமிழகத்தில் தற்போது 13 மணல் குவாரிகள் திறக்க அரசு முடிவு செய்துள்ளது. இதன்மூலம் தமிழகத்தை பாலைவனமாக்கும் முயற்சி நடைபெற்று வருகிறது. குவாரி மூலம் ஆதாயம் பெற வேண்டும், ஊழல் செய்ய வேண்டும், கொள்ளையடிக்க வேண்டும் என்பதே திமுக அரசின் நோக்கமாக உள்ளது.
மணல் குவாரிகளை திறக்கவிட மாட்டோம். மீறி திறந்தால், மக்களை திரட்டி போராட்டம் நடத்துவோம். நாட்டில் விலைவாசி உயர்வு, சட்டம் ஒழுங்கு சீர்கேடு, பாலியல் வன்கொடுமை விவகாரம் இப்படி எத்தனையோ பிரச்சி னைகள் உள்ளன. அதை பற்றி பேசாமல் பெரியார் குறித்து சீமான் பேசுவது மக்களை திசை திருப்பும் செயல்.
கிழக்கு கடற்கரை சாலை விவகாரத்தில் உண்மையான குற்றவாளிகளை கைது செய்து கடுமையான தண்டனை பெற்றுத்தர வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். மாவட்ட செயலாளர்களை தனித்தனியே அழைத்து விவாதித்த பழனிசாமி, தொகுதிகளில் அதிமுகவின் பலம் மற்றும் பலவீனம் குறித்து கேட்டறிந்தார். அப்போது “கட்சியில் இளைஞர்கள் அதிக அளவில் சேர்த்தால் தான் கட்சி வளரும். அதே நேரத்தில், அவர்களின் குற்றப் பின்னணி குறித்து ஆராய்ந்த பின்னரே கட்சியில் சேர்க்க வேண்டும்” என்று அறிவுறுத்தியுள்ளார்.