கொடநாடு எஸ்டேட் கொலை, கொள்ளை வழக்கு அடுத்த மாதம் 21-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
நீலகிரி மாவட்டம் கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு மாவட்ட நீதிபதி முரளிதரன் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது. கொலை, கொள்ளை வழக்கின் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் வாளையார் மனோஜ் நேரில் ஆஜராகினார். மேலும், அரசு தரப்பு வழக்கறிஞர்கள் ஷாஜகான் மற்றும் கனகராஜ் ஆகியோர் ஆஜராகினர். சிபிசிஐடி., ஏடிஎஸ்பி., முருகவேல் தலைமையில் போலீஸார் ஆஜராகினர்.
தற்போது சாட்சிகளிடம் விசாரித்து வருவது குறித்தும் நீதிபதியிடம் அரசு தரப்பு வழக்கறிஞர்கள் ஷாஜகான் மற்றும் கனகராஜ் ஆகியோர் தெரிவித்ததை தொடர்ந்து வழக்கின் விசாரணையை வரும் ஜனவரி மாதம் 21-ம் தேதிக்கு ஒத்தி வைத்து நீதிபதி முரளிதரன் உத்தரவிட்டார்.
இதனைத் தொடர்ந்து அரசு தரப்பு வழக்கறிஞர் ஷாஜகான் கூறியதாவது; ‘‘கொடநாடு கொலை, கொள்ளை விசாரணை குறித்து விசாரணையின் நிலை குறித்து நீதிபதி கேட்டறிந்தார். வழக்கு நடந்து வருவது குறித்து நீதிபதியிடம் தெரிவித்தோம். இதனைத் தொடர்ந்து, வழக்கு விசாரணை பிப்ரவரி மாதம் 21-ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்’’ இவ்வாறு அவர் கூறினார்.