‘திராவிட மாடல் ஆட்சி’யில், ‘இன்றைக்கு அமெரிக்காவை விட தமிழகத்தில்தான் பெண்களுக்கு பாதுகாப்பு அதிகம் இருக்கிறது’’ என முன்னாள் அமைச்சர் பூங்கோதை பேசியிருக்கிறார்!

தென்காசி தெற்கு மாவட்டம், ஆலங்குளம் சட்டமன்ற தொகுதி, கடையம் வடக்கு ஒன்றியம் மடவார் விழாகத்தில் கழக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தலைமையில் திராவிட மாடல் அரசின் சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடந்தது. இதில் முன்னாள் அமைச்சரும், மாநில சுற்றுச்சூழல் அணி தலைவர் டாக்டர் பூங்கோதை ஆலடி அருணா கலந்து கொண்டு பேசினார்.

முன்னாள் அமைச்சர் பூங்கோதை ஆலடி அருணா பேசும்போது, ‘‘இன்றைக்கு நமது கழகத்தையும், இயக்கத்தையும் கட்டுக்கோப்போடு எந்த சூழ்நிலையிலும் தடம் புரளாமல் நேர்மையோடு கழகமே கண் என இருக்கவேண்டும் என்று எங்களுக்கெல்லாம் ஊக்கம் கொடுத்து வழிகாட்டியாக இருக்கும் அன்பு அண்ணன் ஆர்.எஸ்.பாரதி அவர்களுக்கு வணக்கத்தை தெரிவித்துக்கொள்கிறேன். வெற்றிகொண்டான் மற்றும் மாவட்ட பொறுப்பாளர் ஜெயபாலன் அவர்களுக்கும், ஆலங்குளம் தொகுதி பொறுப்பாளர் கணேஷ் குமார் ஆதித்தன் உள்பட இங்கு வந்திருக்கு அனைத்து கழக நிர்வாகிகளுக்கும், தொண்டர்களுக்கும் வணக்கத்தை தெரிவித்துக்கொள்கிறேன்!

வருகிற 2026ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் நம் முதல்வர் கூறியது போல 200க்கும் மேற்பட்ட சட்டமன்றத் தொகுதிகளில் தி.மு.க. வெற்றி பெறுவது உறுதி. இன்றைக்கு என்ன திராவிட மாடல் ஆட்சி? என்ன பெருசா என்ன பண்ணீட்டாங்க என்று சிலர் (எதிர்க்கட்சி) கேட்கிறார்கள்? நான் சுருக்கமாக ஒரு விஷயத்தை சொல்ல விரும்புகிறேன். நாங்கள் முதன் முதலாக 1967ம் ஆண்டு ஆட்சிக்கு வந்தோம். ஒரு மாநிலம் சுபிட்சமாகி வளர்ந்திருக்கிறதென்றால், அந்த மாநிலத்தின் தனி நபர் வருமானத்தைப் பார்ப்பார்கள். அந்த சமயத்தில் தமிழ்நாட்டில் தனிநபரின் ஆண்டு வருமானம் தோராயமாக 15 ஆயிரம் ரூபாயும், தேசிய அளவில் 24 ஆயிரம் ரூபாயுமாக இருந்தது.

கடைசி பத்து மாநிலங்களில் ஒருமாநிலமாக 1967ல் தமிழ்நாடு இருந்தது. இன்றைக்கு 2024ல் தேசிய அளவில் தனி நபர் வருமானம் 1,96 ஆறாயிரம் ரூபாய். அதாவது 1 லட்சத்து 96 ஆயிரம் ரூபாய். இங்கு ரூ.3 லட்சத்து 8 ஆயிரம் ரூபாய். சராசரியாக தேசிய அளவிலான வருமானத்தை விட நம்முடைய வருமானம் 15 விழுக்காடு இன்றைக்கு அதிகரித்திருக்கிறது. இதுதான் திராவிட மாடல் ஆட்சியின் வளர்ச்சி.

அடுத்து, முக்கியமான குறியீடு… பெண்கள் எப்படி இருக்கிறார்கள்? அதாவது பெண்கள் கர்ப்ப காலத்தில் எந்தவொரு சோதாரமும் இல்லாமல் கர்ப்ப காலங்களை கடந்து சென்று குழந்தைகளை பெற்றெடுக்கிறார்கள். இன்றைக்கு தமிழ்நாட்டில் கேரளாவிற்கு அடுத்து மிகக் குறைந்த அளவில் ஒரு லட்சம் பெண்களுக்கு 39 பெண்கள்தான் மரணமடைகிறார்கள். ஆனால், பா.ஜ.க.ஆளும் மாநிலங்களில் எல்லாம் ஒரு லட்சம் பெண்களுக்கு 150, 197, 200 என்றளவில் பெண்கள் மரணமடைகிறார்கள்.

உலகில் மிகப்பெரிய பணக்கார, வல்லரசு நாடு என அமெரிக்காவைச் சொல்வார்கள். அங்குள்ள ஒரு சில மாகாணங்களை விட, அதாவது 3 மகாணங்களை விட தமிழகத்தில் இறப்பு சதவீதம் குறைவாக இருக்கிறது. இதனை நான் சும்ம சொல்லவில்லை. புள்ளி விபரங்கள் இருக்கிறது. இதற்கெல்லாம் ஒரே காரணம் நம் முதல்வர் அன்பு அண்ணன் தளபதிதான் ஒரே காரணம் என்பதை நான் பெருமையுடன கூற விரும்புகிறேன். இந்த நாண்காண்டுகளில் 8 விழுக்காடு பெண்களின் மரண விகிதாச்சாரம் குறைந்திருக்கிறது.

அடுத்து கல்வியறிவிலும் நாம்தான் முதலிடம். இதுதான் இன்றைக்கு திராவிட மாடல் ஆட்சியின் சாதனை. இன்றைக்கு தமிழகத்தில் பெண்களுக்காகவே ‘ஸ்டாலின் பஸ்’ இருக்கிறது என பெண்கள் இலவசமாக எங்கு சென்றாலும் செல்கிறார்கள். பெண்களுக்காக பல்வேறு திட்டங்களை தமிழ்நாட்டில் கொண்டு வந்திருக்கிறார் முதல்வர் அண்ணன் தளபதி. இதையெல்லாம் பொறுத்துக்கொள்ள முடியாமல்தான் எதிர்க்கட்சிகள் குறைகூறி வருகின்றனர். வருகிற 2026 தேர்தலில் பெண்களின் வாக்குகளே அண்ணன் தளபதியை இரண்டாவது முறையாக முதலமைச்சராக்கிவிடும்’’ என்றார்.

கடந்த சமீபகாலமாக தி.மு.க.வின் பொதுக்கூட்டங்களிலும், சாதனை விளக்கப் பொதுக்கூட்டங்களிலும் முன்னாள் அமைச்சர் பூங்கோதை ஆலடி அருணா பேசி வருவரு உடன் பிறப்புக்களை உற்சாகத்தில் ஆழ்த்தியிருக்கிறது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal