காவல்துறை அதிகாரிகளுக்கும் இருக்கக்கூடிய பணிச்சுமை, வனத்துறை அதிகாரிகளுக்கு இருக்குமா? என்பதுதான் பலரது கேள்வியும்? இந்த நிலையில்தான் கல்வராயன் மலையில் கஞ்சா செடிகள் கண்டுபிடிக்கப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

கள்ளக்குறிச்சி மாவட்டம், கருணாபுரத்தில் கள்ளச்சாராயம் குடித்து 69 பேர் உயிரிழந்த சம்பவத்தையடுத்து, கள்ளச்சாராயம் மற்றும் கஞ்சா விற்பனையைத் தடுப்பதில் அம்மாவட்ட காவல்துறை கூடுதல் கவனம் செலுத்தி வருகிறது. இச்சூழலில் கல்வராயன்மலை பெருமாநத்தம் கிராம மலை உச்சியில் கள்ளத்தனமாக அனுமதியின்றி கஞ்சா செடி பயிர் செய்து வந்ததாக கரியாலூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் மணிபாரதி, தனிப்பிரிவு காவலர் பிரபு ஆகியோர் தலைமையிலான சிறப்பு அதிரடி படையினர் மற்றும் போலீஸார் கடந்த 17-ம் தேதி ரோந்து பணியின் போது, அங்கு பயிரிடப்பட்டிருந்த கஞ்சா செடிகளை கண்டுபிடித்து, அது தொடர்பாக கோவிந்தராஜ் மற்றும் பர்வதம் ஆகிய இருவரை கடந்த 18-ம் தேதி கைது செய்தனர்.

கல்வராயன்மலையில் உள்ள பெருமாநத்தம் பகுதியில் சற்றேறக்குறைய அரை ஏக்கரில் 1,600 கஞ்சா செடிகள் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. அதாவது, 100 கிலோ கஞ்சா செடிகளை பறிமுதல் செய்ததாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்த கஞ்சா செடி வளர்ப்பு சம்பவம் தொடர்பாக கல்வராயன்மலைவாசிகள் மத்தியில் பல்வேறு தகவல்கள் பரவி வருகின்றன.

இதுதொடர்பாக கல்வராயன்மலையைச் சேர்ந்த ஒருவர் கூறுகையில், “கல்வராயன்மலையில் வனத்துறைக்குச் சொந்தமான இடத்தில் உள்ள மூங்கில் மரங்களை வெட்டினாலே அபராதம் விதிக்கின்றனர். இதுபோன்று மலைவாழ் மக்கள் 500-க்கும் மேற்பட்டோர் அபராதம் செலுத்தியுள்ளனர். சாலை போடும் பணிக்காக ஒருவர் அதற்குண்டான பொருட்களை கொண்டு சென்று, சாலை போட்ட போது கண்கொத்தி பாம்பாக கண்காணித்து கேள்வி எழுப்பும் வனத்துறையினர், வனத்துறைக்கு சொந்தமான இடத்தில் 3 மாதங்களுக்கு மேலாக பயிரிடப்பட்டு கஞ்சா செடி வளர்த்திருப்பதை கண்டு கொள்ளாமல் இருப்பது ஆச்சரியத்தைத் தருகிறது.

ஒருவரது நிலத்தில் சட்டத்துககு புறம்பான செயல் நடைபெறும்போது, நில உரிமையாளரை விசாரித்து, கைது செய்யும் காவல்துறை, கஞ்சா செடி வளர்ப்புக்குச் சொந்தமான நிலத்தின் உரிமையாளரான வனத்துறையிடம் விசாரணை நடத்தவில்லை. கஞ்சா செடி வளர்த்ததாக இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதன் பின்னணியில் வனத்துறையினர் இருக்க வாய்ப்புண்டு” என்று தெரிவிக்கிறார்.

காலியாக இருக்கும் வன அதிகாரி பதவி விழுப்புரம் மாவட்டத்தில் இருந்து கள்ளக்குறிச்சி மாவட்டம் பிரிக்கப்பட்டு 5 ஆண்டுகளாகியும், இதுவரை இங்கு மாவட்ட வன அதிகாரி நியமிக்கப்படவில்லை. விழுப்புரம் மாவட்ட வன அதிகாரியே, கள்ளக்குறிச்சி மாவட்டத்துக்கும் பொறுப்பு அதிகாரியாக இருந்து வருகிறார். வன பரப்பளவில் விழுப்புரம் மாவட்டத்தை விட கள்ளக்குறிச்சி மாவட்டம் அதிக இடத்தை கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தில் நடக்கும் குற்றச் செயல்களுக்காக காவல்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கும் தமிழக அரசு வனத்துறை அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதுதான் எல்லோரு கோரிக்கையாகவும் இருக்கிறது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal