2025 பொங்கல் திருவிழாவை ஒட்டி பரிசுத் தொகுப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் கடந்த ஆண்டை போல 1,000 ரூபாய் ரொக்கம் அறிவிக்கப்படவில்லை. இது அடித்தட்டு மக்களுக்கும், மிடில் கிளாஸ் மக்களுக்கும் பெருத்த ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் இதுதொடர்பாக சில வழிகாட்டுதல்களை கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் வெளியிட்டுள்ளார். இதனை முறையாக பின்பற்ற வேண்டும் எனவும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

இது தொடர்பாக பொங்கல் பரிசு வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டிருக்கிறது.

  • பொங்கல் பரிசு தொகுப்பில் இடம்பெற்றுள்ள பச்சரிசி, சர்க்கரை ஆகியவை தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் மூலம் கொள்முதல் செய்யப்பட்டு தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக கிடங்குகளில் இருந்து கூட்டுறவு நியாய விலைக் கடைகளுக்கு கொண்டு செல்ல வேண்டும்.
  • குறிப்பிட்ட காலத்திற்குள் கிடங்கில் இருந்து நியாய விலைக் கடைகளுக்கு நகர்வு செய்யப்பட வேண்டும்.
  • விடுமுறை நாட்களில் நகர்வு செய்யப்பட வேண்டுமெனில் உரிய முன் அனுமதி பெற்று நகர்வு பணி மேற்கொள்ள வேண்டும்.
  • அனைத்து நியாய விலைக் கடைகளிலும் இணைக்கப்பட்டுள்ள அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்களுக்கும் வழங்க தேவையான முழுக் கரும்பை கணக்கிட்டு வேளாண் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கங்கள் மூலம் விவசாயிகளிடம் இருந்து நேரடியாக கொள்முதல் செய்ய வேண்டும்.
  • பொங்கல் பரிசுத் தொகுப்பில் இடம்பெற்றுள்ள பொருட்கள் அனைத்து நியாய விலைக் கடைகளுக்கும் சென்றடைவதை தொடர்புடைய மண்டல இணைப் பதிவாளர்கள் உறுதி செய்ய வேண்டும்.
  • கொள்முதல் செய்யப்படும் முழு கரும்பின் விலை அதிகபட்சம் 35 ரூபாயாக இருக்க வேண்டும்.
  • வட்டார அளவிலான கொள்முதல் குழுக்கள் அந்த மாவட்டத்தில் விளையும் கரும்பினை கொள்முதல் செய்ய முன்னுரிமை அளிக்க வேண்டும்.
  • கரும்பு விளைவிக்கப்படாத மாவட்டங்களில் உள்ள நியாய விலைக் கடைகளுக்கு தேவையான கரும்புகளை அந்த மாவட்டத்தில் உள்ள கூட்டுறவு சங்கங்களே நேரடியாக பிற மாவட்ட கரும்பு விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்து அதற்குரிய தொகையை இ.சி.எஸ். மூலம் விவசாயிகள் கணக்கில் நேரடியாக வழங்க வேண்டும்.
  • சிறு, குறு, ஆதிதிராவிடர், பழங்குடியின விவசாயிகளுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்.
  • கரும்பின் நுனியில் இருக்கும் தோகையை வெட்டாமல் முழு கரும்பையும் குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்க வேண்டும். இதில் எந்தவித புகார்களுக்கும் இடமளிக்காமல் விநியோகம் செய்ய வேண்டும்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal