‘‘ஏற்கனவே பல வழக்குகள் உள்ள ஞானசேகரனை அரசு எப்படி இயல்பாக நடமாட அனுமதித்தது? விசாரணை தொடர்பாக ஆய்வறிக்கை சமர்ப்பிக்க உள்ளோம்’’ என தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் மம்தா குமாரி தெரிவித்தார்.
அண்ணா பல்கலை மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம், தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக விசாரித்த போலீசார், தி.மு.க.,வை சேர்ந்த ஞானசேகரன் என்பவரை கைது செய்தனர். இந்த வழக்கில் மாணவி பற்றிய முழு விவரங்களுடன் எப்.ஐ.ஆர்., வெளியான விவகாரம், பெரிய சர்ச்சையாக வெடித்த நிலையில், தேசிய மகளிர் ஆணையம் நேரடியாக களம் இறங்கியது.
சென்னை வந்த மகளிர் ஆணைய உறுப்பினர்களான மம்தா குமாரி, பிரவின் ஷிவானிடே ஆகியோர், அண்ணா பல்கலையில் வெவ்வேறு துறைகளில் 7 மணி நேரம் நேரடியாக விசாரணை நடத்தினர். பல்கலை பேராசிரியர்கள், மாணவ, மாணவியரிடம் விசாரித்து பல்வேறு தகவல்களை சேகரித்தனர். கவர்னர் ரவியை, ராஜ் பவனில் சந்தித்த மகளிர் ஆணைய குழுவினர், போலீஸ் டி.ஜி.பி.,யையும் சந்தித்தனர்.
இந்நிலையில், டெல்லி செல்லும் முன் சென்னை விமான நிலையத்தில் தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் மம்தா குமாரி செய்தியாளர்களிடம், ‘‘ ஏற்கனவே பல வழக்குகள் உள்ள ஞானசேகரனை அரசு எப்படி இயல்பாக நடமாட அனுமதித்தது? பாதிக்கப்பட்ட மாணவியை சந்தித்து விசாரித்தோம். கவர்னரிடமும் பேசியிருக்கிறோம். விசாரணை தொடர்பான ஆய்வறிக்கையை சமர்ப்பிக்க உள்ளோம்’’ இவ்வாறு அவர் கூறினார்.