தந்தை பெரியாரின் 51வது நினைவுநாளையொட்டி ‘மானமும் அறிவும் மனிதனுக்கு அழகு!’ என்ற சொல்லோது அவரது நினைவலைகளை பகிர்ந்திருக்கிறார் முன்னாள் எம்.எல்.ஏ., கே.பி.இராமசுவாமி!
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், ‘‘’பகுத்தறிவு பகலவன்’, ‘வைக்கம் வீரர்’, ‘தந்தை பெரியார்’, தென்னிந்தியாவின் சாக்ரடீஸ் என பல்வேறு பெயர்களில் அழைக்கபடும் ஈ.வெ ராமசாமி மறைந்த தினம் இன்று. 1879 ஆம் ஆண்டு செப்டம்பர் 17 ஆம் தேதி, ஈரோட்டில் பிறந்த இவர், தன்னுடைய சிறு வயது முதலே தன்னுடைய பகுத்தறிவால், புராணக் கதைகளில் தனக்கு தோன்றிய வினாக்களுக்கு விடை தேடத் தொடங்கினார்.
காங்கிரஸ் கட்சியின் கொள்கை மேல் கொண்ட ஈடுபாடு காரணமாக 1919 ஆம் ஆண்டு தன்னை அக்கட்சியில் இணைத்துக் கொண்டார். 1925 ஆம் ஆண்டு பெரியாரால் சுயமரியாதை இயக்கம் தோற்றுவிக்கப்பட்டது. இந்த இயக்கம் ‘மூடப்பழக்க வழக்கங்களை மக்களிடத்திலிருந்து அகற்றுவதை’ நோக்கமாக கொண்டு செயல்பட்டது. பெரியார் நீதிக்கட்சியின் தலைவராக பொறுப்பேற்ற பிறகு ‘நீதிக்கட்சி’ என்ற பெயரை 1944-ல் ‘திராவிடர் கழகம்’ என பெயர் மாற்றினார்.
திராவிட கழகத்தின் கொள்கைகள் வெகு விரைவில் மக்களிடத்தில் சென்று சேர்ந்தது. திராவிடர் கழகம், சமுகத்தில் பரவிக் கிடந்த தீண்டாமையை ஒழிப்பதிலும், சுயமரியாதை, சாதி எதிர்ப்பு, பகுத்தறிவு, கடவுள்மறுப்பு, பெண் உரிமை மற்றும் பெண்கல்வி போன்றவற்றையும் வலியுறுத்தி தொடங்கப்பட்ட ஒரு சமூக இயக்கமாகவே இருந்தது. எழுச்சியூட்டும் அரசியல்வாதியாக மட்டுமல்லாமல், உலகின் மாபெரும் சுயசிந்தனையாளரும், அழியாத வரலாற்றின் அறிஞருமான தந்தை பெரியார், 1973 டிசம்பர் 24, இதே நாளில் இயற்கை எய்தினார்.அவருடைய 51 வது நினைவு நாளில் போற்றி வணங்குகிறோம்…. இப்படிக்கு… கே.பி.இராமசுவாமி Ex, MLA. ஒன்றியகழக செயலாளர். நாமகிரிப்பேட்டை.’’ என பெரியாரின் நினைவலைகளை பதிவிட்டிருக்கிறார்.