அமைச்சர் துரைமுருகனுக்கு ஏன் இன்னொரு துணை முதல்வர் பதவி தரவில்லை என்று பா.ம.க., தலைவர் அன்புமணி கேள்வி எழுப்பி உள்ளார்.

தமிழகத்தில் வன்னியர்களுக்கு 10.5 சதவீதம் உள் இடஒதுக்கீடு கோரி விழுப்புரத்தில் பா.ம.க. சார்பில் இன்று(டிசம்பவர் 24) அறிவித்தபடி, போராட்டம் நடத்தப்பட்டது. இதில் பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் கலந்து கொண்டார்.

போராட்டத்தின் போது அவர் பேசியதாவது;

‘‘வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு கோரி 55 ஆண்டுகளுக்கு முன் தொடங்கிய போராட்டம் இன்றும் தொடர்கிறது. இப்போது தெலுங்கானாவில் சாதிவாரி கணக்கெடுப்பு எடுத்துக் கொண்டிருக்கின்றனர்.

மற்ற மாநிலங்களில் சாதிவாரி கணக்கெடுப்பு நடக்கும்போது தமிழகத்தில் அதை செய்ய தமிழக அரசு மறுக்கிறது. இது வன்னியர்களுக்கு எதிரான வன்மம் தானே. அப்படி என்ன நாங்கள் உங்களுக்கு கேடு செய்துவிட்டோம்.

ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களுக்காக 45 ஆண்டுகாலமாக நான் போராடி வருகிறேன். 27 ஆண்டுகளாக போராடி மகாத்மா காந்தி, நாட்டுக்கு சுதந்திரம் வாங்கினார். நான் 45 ஆண்டுகளாக போராடி வருகிறேன்.

55 ஆண்டுகளுக்கு முன் தி.மு.க.,வுக்கு வன்னியர் இனவெறி தொடங்கியது. ஏன் இவ்வளவு கோபம். ஒவ்வொரு முறை தேர்தல் வரும்போது வன்னிய மக்கள் ஏமாந்து கொண்டு இருந்தனர். ஆனால் இம்முறை அப்படி நடக்காது. வன்னிய இளைஞர்கள் தெளிவாக இருக்கின்றனர். தி.மு.க.,வை வளர்த்தது வன்னியர்கள்தான்’’ இவ்வாறு ராமதாஸ் பேசினார்.

காஞ்சிபுரத்தில் நடைபெற்ற போராட்டத்தில் அன்புமணி பேசியதாவது; ‘‘தி.மு.க.,வுக்கு ஓட்டு போட்டு ஓட்டு உழைத்தவர்கள் வன்னியர்கள். நீங்கள் (ஸ்டாலின்) முதல்வர். உங்கள் மகன் (உதயநிதி) துணை முதல்வர்.

ஆனால் மூத்த அமைச்சர் துரைமுருகன் பொதுச்செயலாளர். காரணம் வேறு வழியில்லாமல் இந்த பதவியை கொடுத்துள்ளனர். தி.மு.க.,வுக்காக எவ்வளவோ உழைத்து சிறை சென்ற அவருக்கு இன்னொரு துணை முதல்வர் பதவி தரலாமே? ஏன் தரவில்லை. ஏன் மனசு வரவில்லை. காரணம் அவர் பாவபட்ட வன்னியர் சமுதாயத்தைச் சேர்ந்தவர்’’இவ்வாறு அன்புமணி பேசினார்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal