‘‘எதிர்க்கட்சிகள் ஓரணியில் சேருவார்கள் என்று எந்த நம்பிக்கையும் இல்லை. 2026ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் அதிக பெரும்பான்மையில் தி.மு.க., கூட்டணி வெற்றி பெறும்’’ என விடுதலை சிறுத்தைக் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்தார்.

திருச்சியில் நிருபர்கள் சந்திப்பில், திருமாவளவன் கூறியதாவது: ‘‘தி.மு.க., கூட்டணி 200 தொகுதிகளில் வெற்றி பெறும் என முதல்வர் ஸ்டாலின் உறுதிப்பட தெரிவித்து வருகிறார். இந்த தீர்மானத்தை செயற்குழுவிலும் தி.மு.க., நிறைவேற்றி இருக்கிறது. தமிழகத்தில் தி.மு.க., கூட்டணி வலுவாக இருக்கிறது. 2026ம் ஆண்டு சட்டசபை தேர்தலில், முதல்வர் ஸ்டாலின் சொன்னது போல், அதிக பெரும்பான்மையில் தி.மு.க., கூட்டணி வெற்றி பெறும். எதிர்க்கட்சிகள் ஓரணியில் சேருவார்கள் என்று எந்த நம்பிக்கையும் இல்லை.

வேல்முருகன் தி.மு.க., கூட்டணியில் தொடர்ந்து நீடிக்க வேண்டும் என நான் விரும்புகிறேன். சிதறிக்கிடக்கும் எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்க வேண்டும் என்ற விருப்பத்தை டி.டி.வி., தினகரன் வெளிப்படுத்தி இருக்கிறார். பா.ஜ.க, தலைமையில் எதிர்க்கட்சிகள் ஒன்று சேரும் என்று எனக்கு நம்பிக்கை இல்லை.

தமிழகத்தை பொறுத்தவரை, அது வெற்றிக்கரமாக அமையாது என்பதை கடந்த தேர்தல்களில் மக்கள் உணர்த்தி இருக்கிறார்கள். சாதாரண மக்கள், எளிய மக்கள் பாதிக்கப்படாத வகையில் கட்டண உயர்வு, விலைவாசி உயர்வு இருக்க வேண்டும் என்பது எனது வேண்டுகோள். மும்மொழி கொள்கையை ஏற்றால் தான், மாநில அரசுக்கு ஒதுக்க வேண்டிய நிதியை வழங்குவோம் என மத்திய அமைச்சர் வெளிப்படையாகக் கூறியது அதிர்ச்சியளித்தது’’ இவ்வாறு திருமாவளவன் கூறினார்.

2016 ல் மக்கள் நலக் கூட்டணி எப்படி அ.தி.மு.க.வை மீண்டும் ஆட்சிக் கட்டிலில் அமர்த்தியதோ, அது போல் விஜய்யும், அண்ணாமலையும் (தனித்துப் போட்டியிட்டு)தி.மு.க.வை மீண்டும் ஆட்சிக் கட்டிலில் அமர்த்தி விடுவார்கள் என கணித்திருக்கிறாரோ திருமா..?

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal