அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை தேர்தல் ஆணையம் அங்கீகரித்ததை மறுபரிசீலனை செய்ய உத்தரவிடக் கோரி அதிமுக உறுப்பினர்கள் ராம்குமார் ஆதித்தன், கே சு சுரேன் உள்ளிட்டோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தொடர்ந்திருந்தனர். இந்த மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் விளம்பரத்துக்காக தொடரப்பட்ட வழக்கு என்று கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

அதிமுகவில் பல கட்ட பிரச்சினைகளுக்கு பிறகு எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளராக பதவியேற்றுக்கொண்டார். தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக இயங்கி வருகிறது. இந்த நிலையில் அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை அங்கீகரித்ததை எதிர்த்தும், தேர்தல் ஆணையம் அங்கீகரித்ததை மறுபரிசீலனை செய்ய உத்தரவிடக் கோரியும் அதிமுக உறுப்பினர்கள் ராம்குமார் ஆதித்தன், கே சு சுரேன் பழனிச்சாமி உள்ளிட்டோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தொடர்ந்திருந்தனர்

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அதிமுக தொண்டர்கள், கட்சியின் பொதுச் செயலாளர் பதவிக்கு போட்டியிடுவதை தடுக்கும் வகையில், கடந்த 2022 ம் ஆண்டு ஜூலை மாதம் நடந்த பொதுக்குழுவில், கட்சியின் சட்ட விதிகள் திருத்தப்பட்டதாகவும், இதை எதிர்த்த வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளனர்.

நிலுவையில் இருக்கும் வழக்கின் தீர்ப்புக்கு கட்டுப்பட்டது என்ற நிபந்தனையுடன், கட்சியின் திருத்தப்பட்ட விதிகளுக்கும், பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி தேர்ந்தெடுக்கப்பட்டதற்கும் அங்கீகாரம் அளித்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளனர். கட்சியின் எதிர்காலம் மற்றும் தொண்டர்களின் உரிமையை பாதுகாக்கும் வகையில், திருத்தப்பட்ட கட்சி விதிகளையும், எடப்பாடி பழனிச்சாமியை பொதுச் செயலாளராகவும் அங்கீகரித்ததை மறு பரிசீலனை செய்யக் கோரி தேர்தல் ஆணையத்திடம் மனுக்கள் அளித்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

அந்த மனுக்களின் அடிப்படையில் நேரில் விளக்கம் அளிக்கவும், வழக்கு ஆவணங்களை அளிக்கவும் வாய்ப்பளித்து, அவற்றை பரிசீலிக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது.

இந்த வழக்கு நீதிபதிகள் ஆர். சுப்பிரமணியன் மற்றும் சி. குமரப்பன் அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, வழக்கை விசாரித்த நீதிபதிகள், எடப்பாடி பழனிச்சாமியை அதிமுக பொதுச்செயலாளராக அங்கீகரித்ததை மறு பரிசீலனை செய்ய தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக் கோரிய வழக்கை தள்ளுபடி செய்து உத்தவிட்டனர்.

நிலுவை வழக்குகள் முடிவுக்கு வரும் வரை அதிமுகவுக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்க கூடாது என்ற கோரிக்கையுடன் அளித்த மனுவை பரிசீலித்து நான்கு வாரங்களில் முடிவெடுக்க உத்தரவிட்டுள்ள நிலையில், இந்த வழக்கு விளம்பரத்துக்காக தாக்கல் செய்யப்பட்டுள்ளது எனக் கூறிய நீதிபதிகள், வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal