அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவில் நேற்று பேசிய விஜய், திமுகவை கடுமையாக விமர்சித்தார். இதற்கு பதிலளித்த துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், ‘‘சினிமா செய்திகளை நான் பார்ப்பது இல்லை’’ என்று காட்டமாக பேசியுள்ளார். இதேபோன்று ஆதவ் அர்ஜூனா பேசியதற்கு உதயநிதி ஆவேசமாக பதிலளித்துள்ளார்.
எல்லாருக்குமான தலைவர் அம்பேத்கர் என்ற நூல் வெளியீட்டு விழாவில் பேசிய ஆதவ் அர்ஜூனா, ‘தமிழகத்தில் மன்னராட்சி நடக்கிறது. அது அகற்றப்பட வேண்டும். பிறப்பால் இன்னொரு முதல்வர் பதவியேற்க கூடாது’ என்று பேசியிருந்தார். இதேபோன்று விஜய்யும் திமுகவை கடுமையாக விமர்சித்து பேசினார்.
இன்று வேலூரில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டு பேசினார். அப்போது அவரிடம், தமிழகத்தில் மன்னராட்சி நடக்கிறது. அது அகற்றப்பட வேண்டும். பிறப்பால் இன்னொரு முதல்வர் பதவியேற்க கூடாது என்று ஆதவ் அர்ஜூனா பேசியது குறித்து செய்தியாளர்கள் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினிடம் கேட்டனர்.
இதற்கு பதில் அளித்த உதயநிதி ஸ்டாலின், ‘‘யாருங்க பிறப்பால் முதல்வர் ஆனாங்க.. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு தானே முதல்வர் ஸ்டாலின் முதல்வர் ஆனாங்க.. மக்களாட்சி தான் நடக்கிறது. இந்த அறிவுகூட இல்லையா..?’’ என்று பதில் அளித்தார். இதேபோன்று விஜய் பேசியது குறித்து கேட்ட கேள்விக்கு பதில் அளித்த உதயநிதி ஸ்டாலின், ‘‘நான் சினிமா செய்திகள் பார்ப்பதில்லை’’ என்று பதில் அளித்தார்.