மத்தியில் மீண்டும் பா.ஜ.க. ஆட்சி அமையவும், பிரதமர் நரேந்திர மோடி 3வது முறையாக பிரதமராக பதவியேற்க இருக்கிறார். இதற்காக என்.டி.ஏ. கூட்டணிக் கட்சித் தலைவர்களான சந்திரபாபு நாயுடுவும், நிதீஷ் குமாரும் ஆதரவு கடித்தத் கொடுக்க ஆயத்தமாகிவிட்டனர்.

18 வது மக்களவைத் தேர்தலில் இன்று காலை முதல் ஓட்டுக்கள் எண்ணப்பட்டு வருகின்றன. இதில் காலையில் துவக்கத்தில் பா.ஜ.க, 300ம் தாண்டி முன்னிலை சென்று கொண்டிருந்தது. ஆனால் 10 மணிக்கு மேல் காங்கிரஸ் தலைமையிலான இண்டியா கூட்டணி 200க்கும் மேற்பட்ட தொகுதிகளில் முன்னிலை பெற்று வருகிறது. இருப்பினும் பா.ஜ.க, தலைமையிலான கூட்டணியே (தற்போது 295) மீண்டும் ஆட்சியை அமைக்கிறது. பா.ஜ., கட்சி அதிகம் எதிர்பார்த்த உ.பி., மேற்குவங்கம் பா.ஜ., வின் காலை வாரியது. மஹாராஷ்ட்டிரா, ராஜஸ்தான் மக்களும் தீர்ப்பை மாற்றி அளித்தனர்.

கடந்த இரண்டரை மாதங்களாக நடந்து முடிந்த 18 வது லோக்சபா ஏழு கட்ட தேர்தலில் பதிவான ஓட்டுக்கள் எண்ணப்பட்டு வருகின்றன. காலை முதல் பா.ஜ.க, தலைமையிலான தேசியஜனநாயக கூட்டணியே அதிக தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகின்றன. 3வது முறை ( ஹாட்ரிக்) பிரதமர் ஆகும் வாய்ப்பை நரேந்திரமோடி பெற்றுள்ளார். இந்தியாவில் ஜவஹர்லால் நேரு காலத்திற்கு பின்னர் தொடர்ந்து 3 வது முறை வெற்றி பெற்ற பிரதமர் என்ற பெருமையை மோடி பெறுகிறார்.

கடந்த 77 ஆண்டுகால வரலாற்றில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. இந்த வெற்றியை நாடு முழுவதும் பா.ஜ.க, தொண்டர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். பிரதமர் மோடிக்கு உலகம் முழுவதும் இருந்து பாராட்டும் வாழ்த்தும் குவிந்து வருகின்றன.

ஊழலுக்கு எதிராக கடும் நடவடிக்கை, அனைவருக்கும் வங்கிகணக்கு, ஆதார் நடைமுறை வெற்றி, அயோத்தியில் ராமர் கோயில், கறுப்புப்பணம் ஒழிப்பு, பொருளாதார முன்னேற்றம், பழைய சட்டங்களை ஒழித்தல், காஷ்மீரில் மோடி எடுத்த சில முக்கிய முடிவுகள், ஏழை, விவசாயிகளின் முன்னேற்றம், விவசாயிகளுக்கு உதவிதொகை, இலவச காஸ், பிரதான்மந்திரி ஜன் ஆரோக்கிய யோஜனா, மருத்துவகாப்பீடு, பெண்களுக்கு அதிகாரம், ஏழைகளுக்கு பிரதமர் மோடியின் வீடு கட்டும் திட்டம், கோவிட் காலத்தில் தடுப்பு முறைகள் சிறப்பான கையாளுதல், இந்நேரத்தில் மக்கள் தேவைகளுக்கேற்ப உதவியது, பிரதமர் மோடியின் சிறப்பான திட்டமிட்ட பிரசாரம், இப்படி பல்வேறு விஷயங்கள் பா.ஜ.க, கூட்டணி வெற்றிக்கு கைகொடுத்துள்ளது.

காங்கிரஸ்தலைமையிலான இண்டியா கூட்டணியில் 28 கட்சிகள் இடம்பெற்றன. பல தலைவர்கள் ஒன்று கூடி பிரதமர் மோடிக்கு எதிராக பிரசாரம் செய்தனர். பிரதமர் மோடி மீது எதிர்கட்சிகள் குற்றச்சாட்டுகள், கடும் விமர்சனம் வைத்தனர். இதனால் பா.ஜ.க, ஓட்டுக்கள் சற்று சரிந்துள்ளது. கடந்த முறை 52 தொகுதிகளை மட்டுமே கைப்பற்றிய காங் கூட்டணி தற்போது 200 க்கும் மேற்பட்ட தொகுதிகளை கைப்பற்றும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

இதற்கிடையே பா.ஜ.க. தனிப்பெரும்பான்மையாக 245 இடங்களுக்கும் மேல் பெற்றிருக்கும் நிலையில், காங்கிரஸ் 100 இடங்களுக்குள்ளு, கூட்டணிக்கட்சிகள் 120 இடங்களுக்கும் மேல் பெற்றிருக்கும் நிலையில், சரத்பவார், மு.க.ஸ்டாலின், கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் ஆகியோர் ‘இண்டியா’ கூட்டணி எப்படியாவது ஆட்சி அமைக்க வேண்டும் என்ற நோக்கில் நிதிஷ்குமாரிடமும், சந்திரபாபு நாயுடுவிடமும் பேசிப்பார்த்தனர். ஆனால், எந்தவித முன்னேற்றமும் இல்லாததால், அமைதியாகிவிட்டனர்.

தவிர, தேர்தல் முடிவுகள் முழுவதுமாக வெளிவந்த பின்னர் ஏதாவது குதிரை பேரத்திற்கு வாய்ப்பி இருக்குமா? என்று பார்த்தால், அதுவும் மிகக்குறைவாகவே தெரிகிறது. எனவே, மூன்றாவது முறையாக பிரதமர் மோடி அரியணையில் அமர்ந்து வரலாற்று சாதனையை நிகழ்த்த ஆயத்தமாகி வருகிறார்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal