“பத்திரிகை சுதந்திரம் என்று மூச்சுக்கு முன்னூறு தடவை வாய்ச்சவடால் விடும் திமுக அரசில் பத்திரிகையாளர்கள் தாக்கப்படுவது சர்வ சாதாரணமாகிவிட்டது. எனவே, கோவை சிறையில் பத்திரிக்கையாளர் சவுக்கு சங்கர் தாக்கப்பட்டாரா என்று நீதிபதி ஒருவர் மூலம் விசாரணை நடத்த வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்” என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில், “சமூக ஊடக பத்திரிகையாளர் சவுக்கு சங்கர் ஒருசில சர்ச்சைக் கருத்துக்களை வெளிப்படுத்தியுள்ளார் என்று குற்றம் சாட்டி கைது செய்துள்ளது காவல் துறை. அவர் தெரிவித்த கருத்துகள் தவறானதாக இருந்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கலாம். சவுக்கு சங்கரின் வழக்கறிஞர் கோவை சிறையில் அவரை சந்தித்தப் பின் அளித்த பேட்டியில், சவுக்கு சங்கரை சிறையில் அடைப்பதற்கு முன்பு மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு நல்ல நிலையில் சிறைக்கு சென்றார்.

இந்நிலையில், கோவை சிறையில் அவர் கடுமையாக தாக்கப்பட்டுள்ளதாக வழக்கறிஞர் தெரிவித்துள்ளார். எனவே, நீதிபதி ஒருவரை நேரில் அனுப்பி சவுக்கு சங்கரின் உடல்நிலை குறித்து ஆய்வு செய்ய வேண்டி மனு அளித்துள்ளதாக வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.

பத்திரிகை சுதந்திரம் என்று மூச்சுக்கு முன்னூறு தடவை வாய்ச்சவடால் விடும் திமுக அரசில் பத்திரிகையாளர்கள் தாக்கப்படுவது சர்வ சாதாரணமாகிவிட்டது. மேலும், பெண்களை இழிவாகப் பேசிய, பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபட்ட பல திமுகவினர் மீது இந்த அரசு நடவடிக்கை எடுக்காமல் இருப்பதால் அவர்கள் சுதந்திரமாக நடமாடி வருகின்றனர்.

சட்ட நடவடிக்கைகளும் நீதியும் அனைவருக்கும் சமமானதாக இருக்க வேண்டும். சட்டத்தை காவல் துறையே கையில் எடுப்பது என்பது ஜனநாயகத்தில் நம்பிக்கையுள்ள எவரும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். இத்தகைய தாக்குதல்கள் தவறான முன்னுதாரணமாகிவிடும். எனவே கோவை சிறையில் பத்திரிக்கையாளர் சவுக்கு சங்கர் தாக்கப்பட்டாரா என்று நீதிபதி ஒருவர் மூலம் விசாரணை நடத்த வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்” என்று அவர் பதிவிட்டுள்ளார்.

எடப்பாடி பழனிசாமியின் அறிக்கை குறித்து தமிழக அரசியல் பார்வையாளர்களிடம் பேசினோம். ‘‘சார், சவுக்கு சங்கர் மீது அ.தி.மு.க. போட்ட வழக்குகளே இன்னும் நிலுவையில் இருக்கிறது. ஒரு கட்சிக்கு ஆதரவாக மற்றொரு கட்சியை மிகவும் தரம் தாழ்ந்து விமர்சிக்கிறார் சவுக்கு சங்கர்.

தமிழக காவல்துறையில் பணியாற்றும் பெண்களைப் பற்றி சவுக்கு சங்கர் தரம் தாழ்த்தி பேசியிருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது. இதற்கு முதலில் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்திருக்க வேண்டும். தவிர, சவுக்கு சங்கர் எந்த பத்திரிகையில் பணியாற்றுகிறார். அவருக்காக எந்தவொரு சங்கமும் இதுவரை ஆதரவாக அறிக்கைக் கூட விடவில்லையே?’’ என்றனர்.

தீதும் நன்றும் பிறர் தர வாரா…? பத்திரிகையாளர் என்று சொல்லிக்கொள்ளு சவுக்குக்கு பத்திரிகை தர்மம் பற்றி தெரியாதா என்கிறார்கள் மூத்த பத்திரிகையாளர்கள் சிலரே..!

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal