தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மக்களவைத் தேர்தல் முடிந்த பிறகு, முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு உளவுத்துறை மூலம் கிடைத்துள்ள ரிப்போர்ட் தான் உற்சாகம் அடைய வைத்திருக்கிறதாம்.

இது பற்றி அறிவாலய வட்டாரத்தில் மூத்த நிர்வாகிகள் சிலரிடம் பேசினோம். ‘‘தேசிய அளவில் லோக்சபா தேர்தல் தீவிரம் இன்னும் முடியவில்லை. லோக்சபா தேர்தலுக்கான கொண்டாட்டங்கள், பிரச்சாரங்கள் மிக தீவிரமாக நடந்தபடியே இருக்கின்றன. 26ம் தேதி ராஜஸ்தான் உள்ளிட்ட மாவட்டங்களில் இரண்டாம் கட்ட தேர்தல் நடக்க உள்ளது.

இதற்கான பிரச்சாரங்கள் தீவிரம் அடைந்து வருகின்றன. ஆனால் தமிழ்நாட்டில் தேர்தல் பிரச்சாரங்கள், தேர்தல் எல்லாம் முடிந்து அமைதியான சூழ்நிலை நிலவுகிறது. கடந்த வெள்ளிக்கிழமை நாடு முழுக்க லோக்சபா தேர்தல் திருவிழா பிரம்மாண்டமாக தொடங்கியது. கடந்த 2019ம் ஆண்டை போலவே இந்த முறையும் நாடு முழுவதும் 7 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. கடந்த வெள்ளிக்கிழமை 2024 மக்களவை தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு நடந்தது.

தமிழ்நாட்டின் 39 தொகுதிகள் மற்றும் புதுச்சேரியில் முதற்கட்ட வாக்குப்பதிவு நடந்தது. தமிழ்நாட்டில் மொத்தம் 950 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். நாடு முழுவதும் 21 மாநிலங்களில் உள்ள 102 லோக்சபா தொகுதிகளுக்கு முதற்கட்டமாக தேர்தல் நடந்தது. மொத்தமுள்ள 534 லோக்சபா தொகுதிகளில் 102 தொகுதிகளுக்கு முதல் கட்டத் தேர்தல் நடந்தது.

தமிழகத்தில் 69.46% வாக்குகள் பதிவாகி உள்ளது. அதிகபட்சமாக தர்மபுரியில் 81.48% வாக்குகள் பதிவாகி உள்ளது. கடந்த தேர்தலுடன் ஒப்பிடும் போது வாக்கு சதவிகிதம் கணிசமாகக் குறைந்துள்ளது. குறிப்பாகத் தூத்துக்குடி, தேனி, சிவகங்கை உள்ளிட்ட நட்சத்திர தொகுதிகளில் வாக்குப்பதிவு அதிகம் குறைந்துள்ளது.

தமிழ்நாட்டில் லோக்சபா தேர்தல் முடிந்துள்ள நிலையில் முதல்வர் ஸ்டாலின் முக்கியமான சில ஆலோசனைகளை மேற்கொண்டு இருக்கிறாராம். தனது கைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட் அடிப்படையில் அவர் இந்த ஆலோசனைகளை மேற்கொண்டு இருக்கிறாராம் – தமிழ்நாட்டில் புதுச்சேரியில் என்று 40 இடங்களிலும் திமுக வெல்லும் என்று ஸ்டாலினுக்கு உறுதியான ரிப்போர்ட் சென்றுள்ளதாம்.

  • மத்திய அரசில் பாஜக வெல்ல வாய்ப்பு குறைவு. கடந்த முறையைப் போல் முழு பா.ஜ.க.வுக்கு மெஜாரிட்டி கிடைக்காது. யாருக்கும் மெஜாரிட்டி வராது. அப்படி இருந்தால் இந்தியா கூட்டணியே ஆட்சி அமைக்கும் என்றும் உளவுத்துறை ரிப்போர்ட் சென்றுள்ளதாம். காங்கிரஸின் கடுமையான பிரச்சார யுக்திகளால் முதல் கட்ட தேர்தலில் பாஜக பின்னடைவையே சந்தித்தது.

இப்படிப்பட்ட நிலையில்தான் 2024 லோக்சபா தேர்தலில் பாஜக புதிய பிரச்சார யுக்தியை கையில் எடுத்துள்ளது. வேறு யுக்திகள் வேலைக்கு ஆகாத காரணத்தால் மோடி பிரச்சார யுக்தியை மாற்றி உள்ளார். இஸ்லாமிய பிரச்சனைகள், தாலி விவகாரம் என்று எமோஷனலாக மோடி பேச காரணமே தோல்வி பற்றிய அச்சம்தான் என்று ரிப்போர்ட் சென்றுள்ளதாம். இதை இரண்டையும் கேட்டு ஸ்டாலின் உற்சாகம் ஆகி உள்ளாராம்.

நேற்று மாவட்ட அளவில் நிர்வாகிகள், அமைச்சர்களிடம் ஸ்டாலின் பேசி இருக்கிறார். திமுகவின் உள்ளூர் நிலவரம் தொடங்கி தேர்தல் பணிகள் நடத்தப்பட்ட விதத்தை பாராட்டியும், தகவல்களை கேட்டும் பேசி இருக்கிறார். இது போக தேசிய அளவில் இந்திய கூட்டணி வெற்றிபெற்றால் தமிழ்நாட்டில் இருந்து 3- முதல் 4 அமைச்சர்கள் வர வேண்டும். பெரிய துறைகளை நாம் எடுக்க வேண்டும். யாரை அமைச்சர் ஆக்கலாம். யாருக்கு வாய்ப்பு கொடுக்கலாம் என்றும் ஸ்டாலின் ஆலோசனை செய்து வருகிறார்’’ என்றனர்.

நம்பிக்கைதானே வாழ்க்கை…..?

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal