தமிழகத்தில் அதிமுகவை வீழ்த்த முடியாமல் 10 ஆண்டுகள் திமுக தவிதவித்தது. தான் சந்தித்த அனைத்து தேர்தல்களிலும் திமுகவிற்கு தோல்வியே பரிசாக ஜெயலலிதா வழங்கினார். இதன் காரணமாக ஆட்சியை பிடிக்க முடியாமல் தவித்தது.

2017ஆம் ஆண்டு ஜெயலலிதா மறைவிற்கு பிறகு யார் அடுத்த தலைமை என்ற போட்டியால் அதிமுக பல பிளவுகளாக பிரிந்து கிடக்கிறது. மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் தோழியான சசிகலா, ஜெயலலிதா மறைவுக்கு பின் நடைப்பெற்ற அதிமுக பொதுக்குழுவில் அக்கட்சியின் பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டார். அதன் பின் முதலமைச்சராக காய் நகர்த்திய நிலையில், சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை உறுதி செய்யப்பட பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டார்.

இதற்கிடையில் சசிகலாவுக்கு எதிராக தர்மயுத்தம் நடத்தி வந்த முன்னாள் முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் எடப்பாடி பழனிச்சாமி உடன் கைக்கோர்த்த நிலையில், 2017 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் நடைப்பெற்ற அதிமுக பொதுக்குழுவில் சசிகலா அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டார். இதனை தொடர்ந்து சுமார் 3 ஆண்டுகள் இருவரும் இணைந்து ஆட்சியை நடத்தினர். இதனை தொடர்ந்து 2021 ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலுக்கு சில நாட்களுக்கு முன் சிறையில் இருந்து விடுதலையான சசிகலா, என்ன செய்யப்போகிறார் என ஆவலுடன் எதிர்பார்த்த நிலையில் அந்த தேர்தலில் இருந்து ஒதுங்குவதாக அறிவித்தார். 2021 ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக தோல்வி அடைந்ததில் இருந்து அவ்வப்போது செய்தியாளர்களை சந்திக்கும் சசிகலா, அதிமுகவை ஒன்றினைப்பேன் என தொடர்ந்து கூறி வருகிறார்.

தற்போது அதிமுகவை இணைக்க களம் இறங்கியுள்ளார். நாடாளுமன்ற தேர்தலில் அதிமுகவினர் 3 பிரிவாக பிரிந்து போட்டியிடுவதால் வாக்குகள் பல பிளவுகளாக பிரிந்துள்ளது. இதனால் அதிமுகவிற்கு வெற்றி கிடைக்காமல் திமுகவிற்கு செல்லும் நிலை உருவாகியுள்ளது.

இதுவரை பொறுத்திருந்தது போதும், களத்தில் இறங்கவேண்டும் என சசிகலா முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. அந்த வகையில், தொண்டர்களுக்கு சசிகலா படிவம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த படிவத்தில் தொண்டரின் பெயர், முகவரி, தொலைபேசி எண், மின்னஞ்சல் முகவரி, வயது, ஆதார் எண், கட்சி அமைப்பு மாவட்டம், தாங்கள் சார்ந்திருக்கும் ஒன்றியம் மற்றும் சட்டமன்ற தொகுதி, கல்வி தகுதி, வயது, வகுப்பு, கட்சியில் இணைந்த ஆண்டு, ஜனவரி 1 ஆம் தேதி 2017 ஆம் ஆண்டு கட்சியில் வகித்த பதவி உள்பட பல்வேறு விபரங்கள் கேட்கப்பட்டிருக்கிறது.

மேலும், தற்போது வேறு அமைப்பு அல்லது கட்சியில் இருந்தால் அந்த விவரம் உள்ளிட்டவற்றை பூர்த்தி செய்து, சென்னை போயஸ் கார்டனில் உள்ள சசிகலா வசிக்கும் இல்லமான ஜெ ஜெயலலிதா இல்லம் முகவரிக்கு நேரிலோ அல்லது தபால் மூலமாக அனுப்பலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிமுகவை ஒன்றினைப்பேன் என தொடர்ந்து கூறி வரும் சசிகலா அதனை செயல்படுத்த எந்த நடவடிக்கையும் வெளிப்படையாக எடுக்கவில்லை. முதல்முறையாக அதிமுக தொண்டர்களை ஒன்றிணைக்கும் முதல் படியாக இந்த படிவத்தை வெளியிட்டுள்ளதாக சசிகலா ஆதரவாளர்கள் கூறுகின்றனர்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal