தமிழ்நாட்டில் இந்த முறை வரும் ஏப்ரல் 19ஆம் தேதி ஒரே கட்டமாக லோக்சபா தேர்தல் நடக்கிறது. தேர்தலுக்கு இன்னும் சில வாரங்கள் மட்டுமே இருக்கும் நிலையில், அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிர பிரச்சாரத்தில் இறங்கி உள்ளனர்.இந்த முறை தமிழகத்தில் பல முனை போட்டி ஏற்பட்டுள்ளது. திமுக, அதிமுக, பாஜக, நாம் தமிழர் எனத் தமிழகத்தில் இந்த முறை பல முனை போட்டி நிலவுகிறது.

அதன்படி எம்எல்ஏவாக இருக்கும் நயினார் நாகேந்திரன் இந்த முறை பாஜக சார்பில் நெல்லை லோக்சபா தொகுதியில் போட்டியிடுகிறார். இன்று தனது நெல்லை தொகுதியில் நயினார் நாகேந்திரன் பிரச்சாரத்தைத் தொடங்கினார். முதலில் ஈசான விநாயகர் கோயிலில் சிறப்பு வழிபாடுகளை நடத்திய அவர், அதன் பிறகு பிரச்சாரத்தைத் தொடங்கினார். மேளதாளங்கள் முழங்கக் கட்சியினரின் முழக்கங்களுடன் அவர் தனது பிரச்சாரத்தைத் தொடங்கினார். திருநெல்வேலி டவுன் நான்கு ரத வீதிகளில் அவர் பிரச்சாரம் செய்தார் அப்போது அவர் ஓரிரு வார்த்தைகள் இந்தியில் பேசியது பலரையும் கவனிக்க வைத்தது. பிரதமர் மோடியின் ஆட்சியில் எல்லாருக்கும் எல்லாம் கிடைக்கும் என்று சொன்ன நயினார் நாகேந்திரன், பொதுமக்கள் மீண்டும் மோடி வேண்டும் என்றே கேட்பதாகத் தெரிவித்தார்.

அங்கே பேசிய நயினார் நாகேந்திரன், “என்னைப் பொறுத்தவரை பாஜக என்பது அனைவருக்குமான கட்சி.. கடந்த 10 ஆண்டுகளில் இந்தியப் பிரதமர் மோடி எல்லாருக்குமான ஆட்சியை நடத்தி வந்துள்ளார். சப்கா சாத் சப்கா விகாஸ் என்று இந்தியில் சொல்வார்கள். அப்படிப்பட்ட ஒரு ஆட்சியைத் தான் நரேந்திர மோடி வழங்கி வருகிறார். உடனே இந்தியில் பேசுகிறார் என்று சொல்லிவிடுவார்கள். நல்ல விஷயம் எங்கே இருந்தாலும் எடுத்துக்கொள்ளலாம் அதில் தவறு இல்லை.

மோடியின் கொள்கையே எல்லாருக்கும் எல்லாம் என்பது தான். அதில் எந்தவொரு பேதமும் இருக்காது. மோடி 3ஆவது முறையாகப் பிரதமராக வர வேண்டும் என்பதற்காகவே இந்த தேர்தல் நடைபெறுகிறது. இது தர்மத்திற்கும் அதர்மத்திற்கும் இடையே நடக்கும் போர். மீண்டும் தர்மம் வென்று ஆட்சியை அமைக்கும். கடந்த காங்கிரஸ் ஆட்சியுடன் ஒப்பிடும் போது மத்திய அரசு பல திட்டங்களை தமிழ்நாட்டில் கொடுத்துள்ளது.

தமிழ்நாட்டிற்கு பாஜக ஆட்சியில் மட்டும் சுமார் 3 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்கள் தமிழ்நாட்டிற்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இந்தியத் திருநாடு உலக அரங்கில் வல்லரசு நாடாக மாறி வேண்டும் என்றால் மீண்டும் மோடி ஆட்சி தேவை” என்று அவர் தெரிவித்தார். மேலும் அவர் அங்கே டீக்கடையில் பொதுமக்களுடன் டீ குடித்தும் வாக்கு சேகரிப்பில் இறங்கினார்.

நெல்லை தொகுதியைப் பொறுத்தவரைக் கடந்த லோக்சபா தேர்தலில் அங்கே திமுக சார்பில் எஸ். ஞானதிரவியம் போட்டியிட்டார். அதிமுக சார்பில் பிஎச் மனோஜ் பாண்டியன் போட்டியிட்டார். அதில் 5.22 லட்சம் வாக்குகளைப் பெற்ற எஸ். ஞானதிரவியம், சுமார் 1.85 லட்ச வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

இந்த முறை நெல்லை தொகுதி திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், அக்கட்சியில் இருந்து ராபர்ட் புரூஸ் போட்டியிடுகிறார். அதிமுக சார்பில் ஜான்சி ராணி, பாஜகவில் நயினார் நாகேந்திரன், நாம் தமிழர் கட்சியில் இருந்து சத்யா ஆகியோர் களத்தில் உள்ளனர்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal