நாடாளுமன்ற தேர்தல் தேதி இன்னும் ஓரு சில நாட்களில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனையடுத்து அரசியல் கட்சிகள் கூட்டணியை பேச்சுவார்த்தையை தீவிரப்படுத்தியுள்ளது. கடந்த 4 ஆண்டுகளுக்கு மேலாக கூட்டணியில் இருந்த அதிமுக- பாஜக இடையே கூட்டணி முறிந்துள்ளதால் இரண்டு தரப்பும் புதிய கூட்டணியை அமைத்து வருகிறது.

அந்த வகையில் தமிழகத்தில் தமிழ் மாநில காங்கிரஸ், புதிய நீதிக்கட்சி, இந்திய ஜனநாயக கட்சி உள்ளிட்ட கட்சிகளை பாஜக தங்கள் அணியில் இணைத்துள்ளது. அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட ஓ.பன்னீர் செல்வம் பாஜகவிற்கு ஆரம்பத்தில் இருந்து ஆதரவு தெரிவித்து வருகிறார். ஆனால் பாஜக தரப்போ ஓ.பன்னீர் செல்வம் மற்றும் டிடிவியை கண்டுகொள்ளவில்லை.

பிரதமர் மோடியின் தமிழக பயணத்தின் போது மற்ற கூட்டணி கட்சிக்கு அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில், ஓ.பன்னீர் செல்வத்திற்கு அழைப்பு விடுக்கவில்லை. இதனையடுத்து பாஜக ஓ.பன்னீர் செல்வத்தை சேர்த்துக்கொள்ளுமா.? என்ற கேள்வி எழுத்தது. ஆனால் பாஜக தரப்போ அதிமுகவை தங்கள் அணியில் இழுக்க பல்வேறு முயற்சியும் மேற்கொண்டது.

இறுதியில் காலக் கெடுக்களும் விதித்தது. ஆனால் அதிமுகவோ கூட்டணி முறிவு என்ற முடிவில் மாற்றம் இல்லையென தெரிவித்துவிட்டது. இதன் காரணமாக வேறு வழியின்றி பாஜக ஓ.பன்னீர் செல்வத்தை தங்கள் கூட்டணியில் இணைக்க முடிவு செய்தது. இதனையடுத்து தான் நேற்று நள்ளிரவு ஓ.பன்னீர் செல்வம் மற்றும் அக்கட்சி நிர்வாகிகளோடு பாஜக தலைவர்கள் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.

இது தொடர்பாக ஓ.பன்னீர் செல்வம் கூறுகையில், நாடாளுமன்ற தேர்தலையொட்டி பாஜகவுடன் முதல் கட்டமாக பேச்சுவார்த்தை சுமூகமாக நடைபெற்றது. அனைத்துவிவரங்களையும் சொல்லியிருக்கோம். பாஜக மேலிட தலைவர்கள எங்களது கோரிக்கைகளையும் பிரச்சனைகளையும் கேட்டறிந்தனர்.

எந்த சின்னத்தில் போட்டியென முடிவு எடுக்கப்பட்டதா என்ற கேள்விக்கு பதில் அளித்தவர், தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள 40 தொகுதியிரும் விருப்ப மனு பெறப்பட்டு ஆலோசனை நடத்தி முடித்துள்ளோம். தொகுதி என்ன என்ன கூறியுள்ளோம், கூட்டணியில் உள்ள மற்ற கட்சியிடம் பேசிவிட்டு தெரிவிப்பதாக கூறியுள்ளனர். இன்று மீண்டும் இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை நடத்தப்படவுள்ளதாகவும் தெரிவித்தார். டிடிவி தினகரனையும் பாஜக அழைத்து பேச உள்ளதாக ஓ.பன்னீர் செல்வம் கூறினார்.

இதற்கிடையே பா.ஜ.க.விடம் பன்னீர் செல்வம் சில கோரிக்கைகளை முன் வைத்திருக்கிறார். அதாவது, டி.டி.வி.தினகரன் மற்றும் சசிகலா ஆகியோர் பா.ஜ.க. மீதும் கோபத்தில் இருக்கின்றனர். எனவே, அவர்கள் இருவரையும் சந்தித்து பேசுங்கள். அவர்களுடைய ஆதரவும் நமக்கு தேவை.

அதே சமயம், எங்களை தாமரை சின்னத்தில் போட்டியிட வற்புறுத்தாதீர்கள். இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட முயற்சிக்கிறோம். அது கிடைக்காத பட்சத்தில் தனி சின்னத்தில் போட்டியிடுகிறோம். காரணம், அ.தி.மு.க.வை மீட்கும் முயற்சியில் நாங்கள் மூவரும் இறங்கியிருக்கும் போது, தாமரை சின்னத்தில் போட்டியிட்டால், எடப்பாடி தரப்பு வேறு மாதிரி முத்திரை குத்தி, அ.தி.மு.க.வுக்கும் எங்களுக்கும் ஒட்டுமில்லை… உறவுமில்லை… என்றாக்கி விடுவார்கள்.
எனவே, முக்கியமாக சசிகலாவை சந்தித்து ஆதரவை கோருங்கள் என்ற கோரிக்கையைதான் ஓ.பன்னீர் பி.ஜே.பி. தரப்பிற்கு வைத்திருக்கிறார் என்கிறார்கள்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal