தமிழக மக்களின் வாக்குகளை கவரும் வகையில், பிரதமர் மோடி மீண்டும் தமிழகத்தில் சுற்றுபயணம் மேற்கொண்டு பிரச்சாரம் செய்யவுள்ளார். வருகிற 15,16 மற்றும் 18 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்ளவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நாடாளுமன்றத் தேர்தல் தேதி இன்னும் ஒரு சில நாட்களில் அறிவிக்கப்பட உள்ளது.இந்த நிலையில் அரசியல் கட்சிகள் தங்களது தேர்தல் பணிகளை தீவிரப்படுத்தி வருகிறது. குறிப்பாக தங்களது கூட்டணி கட்சிகளுக்கு தொகுதிகளை பிரித்து வழங்குவது,வேட்பாளர் நேர்காணல் செய்வது என்கிற பணியை தொடங்கி உள்ளது. அந்த வகையில் பாஜக தனது முதல் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு உள்ளது.

விரைவில் இரண்டாம் கட்ட பட்டியலும் வெளியிடப்பட உள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட உள்ளதையொட்டி பிரதமர் நரேந்திர மோடி நாடு முழுவதும் மத்திய அரசால் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு திட்ட பணிகளில் தொடங்கி வைத்து வருகிறார். ஒவ்வொரு மாநிலத்திற்கும் சென்று மத்திய அரசு திட்டங்களை மக்களுக்கு எடுத்துரைக்கும் வகையில் பொதுக்கூட்டங்களிலும் கலந்து கொண்டு உள்ளார்.

இந்த சூழ்நிலையில் தமிழகத்தில் பாஜகவின் வெற்றி வாய்ப்பு குறைவாக இருப்பதாக தொடர்ந்து தகவல் வெளியாகி வரும் நிலையில், அதிமுகவுடன் பாஜக கூட்டணி அமைக்க தொடர்ந்து பேச்சு வார்த்தையை மேற்கொண்டது. ஆனால் அதிமுக தலைமையோபாஜகவுடன் கூட்டணி இல்லை என்ற முடிவில் எந்த வித மாற்றமும் இல்லை என தெரிவித்துவிட்டது. இதனையடுத்து தேமுதிக மற்றும் பாமகவை தங்கள் அணிக்கு இழுக்க பாஜக தீவிரமாக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது அதில் தற்போது வரை ஓரளவு முன்னேற்றமும் ஏற்பட்டுள்ளது. எனவே இந்த தேர்தலில் அதிமுகவை மூன்றாவது இடத்திற்கு தள்ள வேண்டும் என முனைப்போடு பாஜக தீவிரமாக செயல்பட்டு வருகிறது.

இந்த சூழ்நிலையில் தமிழக மக்களின் வாக்குகளை கவர்வதற்காக பிரதமர் நரேந்திர மோடி கடந்த ஒன்றரை மாதங்களில் மட்டுமே ஐந்து முறை தமிழகத்திற்கு பயணம் மேற்கொண்டுள்ளார் அப்போது பல்வேறு திட்ட பணிகளில் தொடங்கி வைத்தவர், பாஜக சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பொதுக்கூட்டங்களிலும் கலந்து கொண்டார். குறிப்பாக பல்லடம் நெல்லை, சென்னை ஆகிய ஊர்களில் பொதுக் கூட்டங்களில் கலந்துகொண்டு தமிழகத்தில் ஆளுங்கட்சியாக உள்ள திமுகவை கடுமையாக விமர்சனம் செய்திருந்தார்.

இந்த பரபரப்பான சூழ்நிலையில் மீண்டும் பிரதமர் மோடி தமிழகம் வரயிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது அந்த வகையில் பிரதமர் மோடி வரும் மார்ச் 15, 16, 18 ஆகிய தேதிகளில் தமிழ்நாட்டில் பிரச்சாரம் செய்கிறார். 15ஆம் தேதி சேலத்திலும், 16ஆம் தேதி கன்னியாகுமரியிலும், 18ஆம் தேதி கோவையிலும் பிரச்சாரத்தில் ஈடுபடு இருப்பதாக பாஜகவினர் தெரிவித்துள்ளனர்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal