பிரதமர் மோடி மார்ச் 22-ம் தேதி மீண்டும் தமிழகம் வர இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரதமர் மோடி கடந்த ஜனவரி 2-ம் தேதி திருச்சிக்கு வந்து, விமான நிலைய புதிய முனையம் உள்ளிட்ட திட்டங்களை தொடங்கி வைத்தார். 2-வது முறையாக ஜனவரி 19-ம் தேதி தமிழகம் வந்த அவர், சென்னையில் கேலோ இந்தியா போட்டிகளை தொடங்கி வைத்தார். 20, 21-ம் தேதிகளில் திருச்சி ஸ்ரீரங்கம், ராமேசுவரம், தனுஷ்கோடி கோயிலுக்கு சென்று வழிபட்டார்.

3-வது முறையாக பிப்ரவரி 27-ம் தேதி பல்லடத்தில் நடந்த ‘என் மண், என் மக்கள்’ யாத்திரை நிறைவு விழா பொதுக்கூட்டத்திலும், மதுரையில் நடந்த நிகழ்ச்சியிலும் பங்கேற்றார். மீனாட்சி அம்மன் கோயிலில் சுவாமி தரிசனம் செய்தார். 28-ம் தேதி தூத்துக்குடியில் நலத்திட்டங்களை தொடங்கி வைத்தார்.

திருநெல்வேலியில் நடந்த பாஜக பொதுக்கூட்டத்தில் பங்கேற்றார்.4-வது முறையாக கடந்த 4-ம் தேதி தமிழகம் வந்த மோடி, கல்பாக்கத்தில் விரைவு ஈனுலையை தொடங்கி வைத்தார்.

சென்னை நந்தனத்தில் நடந்த பாஜக பொதுக்கூட்டத்தில் பங்கேற்றார்.இந்நிலையில், இந்த ஆண்டில் 5-வது முறையாக பிரதமர் மோடி தமிழகம் வர இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. மக்களவைத் தேர்தலையொட்டி, முதல்கட்ட வேட்பாளர் பட்டியலை பாஜக வெளியிட்டது. விரைவில் 2-ம் கட்ட பட்டியலை வெளியிடுவதற்கான பணிகளை தீவிரமாக மேற்கொண்டுள்ளது.

இதில், தமிழக வேட்பாளர்கள் இடம்பெறுவார்கள் என்று கூறப்படுகிறது. இந்த சூழலில், வரும் 22-ம் தேதி மோடி தமிழகம் வர உள்ளதாகவும், குறிப்பாக கொங்கு மண்டலம் அல்லது தென் மாவட்டங்களில் நடைபெறும் பொதுக்கூட்டங்களில் மோடி பேசுவார் என்றும் கூறப்படுகிறது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal