தி.மு.க.வுடனான தொகுதி பங்கீட்டில் வைகோ வருத்தத்தில் இருப்பதால், அ.தி.மு.க. அரவணைக்க தயாராக இருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது.

மக்களவை தேர்தல் விரைவில் நடைபெற இருக்கிறது. இதையடுத்து கூட்டணியை இறுதி செய்வதில் அரசியல் கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன. இந்நிலையில், தமிழகத்தில் திமுக, அதிமுக, பாஜக, நாம் தமிழர் கட்சி இடையே நான்கு முனைபோட்டி நிலவுகிறது. தமிழகத்தை பொறுத்தவரை திமுக கூட்டணியில் கடந்த தேர்தலில் அங்கம் வகித்த கட்சிகளே இடம் பெறும் எதிர்பார்க்கப்பட்டது. தற்போது வரை இந்திய முஸ்லீம் லீக், கொங்கு மக்கள் தேசிய கட்சிக்கு தலா ஒரு இடம் ஒதுக்கப்பட்டு ஒப்பந்தம் கையெழுத்தானது.

அந்த வரிசையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு தலா இரண்டு இடங்கள் ஒதுக்கப்பட்டது. ஆனால், விடுதலை சிறுத்தைகள் கட்சி, மதிமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளிடம் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. திமுகவுடன்தான் கூட்டணி என்பதை உறுதியாக தெரிவித்துவிட்டாலும், தாங்கள் கேட்கும் இடங்களை ஒதுக்க வேண்டும் என்ற நிர்பந்தத்துடன், திமுகவின் முடிவுக்காக காங்கிரஸ், விசிக, மதிமுக கட்சிகள் காத்திருக்கின்றன.

காங்கிரஸ் 12 தொகுதிகளை கேட்ட நிலையில், தற்போது கடந்த முறை அளித்த அதே எண்ணிக்கையாவது வேண்டும் என்பதில் பிடிவாதமாக உள்ளது. இதனால் அடுத்த கட்ட பேச்சுவார்த்தைக்கு அழைக்கப்படாமல் உள்ளது. விசிக, 2 கட்ட பேச்சுவார்த்தையிலும் கடந்த முறை தரப்பட்ட 2 தனித் தொகுதிகளுடன் இந்த முறை 1 பொதுத்தொகுதியும் வேண்டும் என்பதுடன் தங்கள் சின்னத்திலேயே போட்டி என்பதில் உறுதியாக உள்ளது.

அதேபோல் மதிமுகவும், கடந்த முறை தரப்பட்டதுபோல் ஒரு மாநிலங்களவை, ஒரு மக்களவை மற்றும் சொந்த சின்னம் என்பதில் தீவிரம் காட்டி வருகிறது. ஆனால், திமுகவோ மாநிலங்களவை தேர்தல் வரும் போது பார்த்துக்கொள்ளலாம் என்று, நாங்கள் கொடுக்கும் ஒரு தொகுதியும் உதயசூரியன் சின்னத்தில் தான் போட்டியிட வேண்டும் என கூறிவருகின்றனர். இதனால், உடன்பாடு எட்டப்படாமல் இழுபறி ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், இதை தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்ள அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மதிமுகவுக்கு ரகசிய தூதுவிட்டு இருப்பதாகவும், மதிமுக கேட்டும் இரண்டு தொகுதிகள் கொடுக்க தயாராக இருப்பதாகவும், ஆனால் மாநிலங்களவைக்கு வாய்ப்பு இல்லை என்று கூறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கண்டிப்பாக திமுக கூட்டணி உடையும் நமது அணிக்கு வருவார்கள் என எடப்பாடி பழனிசாமி கண்கொத்தி பாம்பாக காத்துக்கொண்டிருக்கிறார்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal