தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் களம் சூடு பிடித்துள்ள நிலையில் அ.தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்று தேர்தலை சந்திக்க தே.மு.தி.க. முடிவு செய்துள்ளது. இதுதொடர்பாக நேரடி பேச்சுவார்த்தைகள் தொடங்கப்படாத நிலையில் ரகசிய பேச்சுவார்த்தை தீவிரமாக நடைபெற்று வருகிறது.  பாராளுமன்ற தேர்தலில் 14 தொகுதிகள் மற்றும் ஒரு மேல்சபை எம்.பி. பதவியை தரும் கட்சியுடனேயே கூட்டணி என்று தே.மு.தி.க. பொதுச் செயலாளர் பிரேமலதா அறிவித்துள்ளார்.

அ.தி.மு.க. கூட்டணியில் இடம்பெறும் பட்சத்தில் தே.மு.தி.க.வுக்கு அத்தனை தொகுதிகள் ஒதுக்கப்படுமா? என்கிற கேள்வியும் எழுந்து உள்ளது. அதே நேரத்தில் பெரிய கட்சிகள் எதுவும் கூட்டணியில் இல்லாத நிலையில் குறிப்பிடத்தக்க இடங்கள் தே.மு.தி.க.வுக்கு ஒதுக்க அ.தி.மு.க. தயாராக இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இதுதொடர்பாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, மூத்த நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி முடிவெடுக்க திட்டமிட்டு உள்ளார்.

தி.மு.க. கூட்டணிக்கு எதிராக வலுவான கூட்டணியை உருவாக்க காய் நகர்த்தி வரும் எடப்பாடி பழனிசாமி, தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தையின் போது விட்டுக்கொடுத்து போகவும் முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. அப்போதுதான் பா.ம.க., தே.மு.தி.க. போன்ற கட்சிகளோடு கைகோர்த்து செயல்பட முடியும் என்றும் அ.தி.மு.க. முன்னணி நிர்வாகிகள் நம்புகிறார்கள். கூட்டணி கட்சிகள் விரும்பும் தொகுதிகளை விட்டுக்கொடுத்து கூட்டணியில் இடம்பெறச் செய்ய வேண்டும் என்பதில் அ.தி.மு.க. உறுதியாக இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.


By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal