திமுக எம்எல்ஏ கருணாநிதியின் மகன் வீட்டில் பணிப்பெண் சித்ரவதை செய்யப்பட்ட புகாரில் அதிர்ச்சியளிக்கும் முதல் தகவல் அறிக்கை விவரம் வெளியாகியுள்ளது.

பல்லாவரம் திமுக எம்எல்ஏ கருணாநிதி மகன் ஆன்டோ மதிவாணன் திருவான்மியூரில் வசித்து வருகின்றார். இவரது மனைவி மெர்லினா, தனது வீட்டில் பணிபுரிந்த பட்டியலின பெண்ணை தாக்கி துன்புறுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனை அடுத்து, இந்த விவகாரம் தொடர்பாக இருவர் மீதும் திருவான்மியூர் மகளிர் காவல் நிலையத்தில், எஸ்சி/எஸ்டி சட்டப்பிரிவுகள், ஆபாசமாக பேசுதல், கொலை மிரட்டல் உள்பட 6 பிரிவுகளில் வழக்குப் பதியப்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்த வழக்கின் முதல் தகவல் அறிக்கை விபரம் தற்போது வெளியாகியுள்ளது. அதில், குழந்தைக்கு உணவு தயாரிப்பதில் தாமதமானதால் மெர்லினா துன்புறுத்தலை தொடங்கியதாக பாதிக்கப்பட்ட பெண் தெரிவித்துள்ளார்.

துணியில் சிறு கரை இருந்தால் சரமாரியாக அடித்தும், சமைக்க தெரியாதென்று சொன்னால் பச்சை மிளகாயை கடித்து சாப்பிட சொல்லி துன்புறுத்தியதாக குறிப்பிட்டுள்ளார். தனது தாயை பார்க்க வேண்டும் என்று கேட்ட போதெல்லாம் நிர்வாணமாக்கி தாக்கியதாகவும், படுக்கவைத்து பிறப்புறுப்பில் மிதித்ததாகவும் முதல் தகவல் அறிக்கையில் இடம்பெற்றுள்ளது.

எம்.எல்.ஏ மகனும் துடைப்பத்தால் அடித்ததாகவும், அடிக்கடி ஜாதி பெயரை சொல்லி இழிவுப்படுத்தியதாகவும் பாதிக்கப்பட்ட பெண் வாக்குமூலம் அளித்துள்ளார். இதன் அடிப்படையில், எம்எல்ஏ மகன் ஆண்டோ மதிவாணன், மருமகள் மெர்லினா மீது வழக்குப் பதியப்பட்டுள்ளதாக முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal