சென்னை, ஈரோடு, கோவை உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட இடங்களில் உள்ள கட்டுமான நிறுவனங்களில் வருமான வரித்துறை சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழகத்தில் கடந்த சில மாதங்களாகவே வருமான வரித்துறை, அமலாக்கத்துறையினர் தீவிரமாக சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த மாதம் மணல் குவாரி, ரியல் எஸ்டேட் நிறுவங்களில் சோதனை நடத்தினர். இந்த சோதனையில் கணக்கில் காட்டப்படாத பல்வேறு ஆவணங்கள் சிக்கியது. இதனையடுத்து வரி மோசடி தொடர்பாக விளக்கம் அளிக்க கோரி அந்த நிறுவங்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இந்தநிலையில் சென்னை அண்ணா நகரில் அடுக்குமாடி குடியிருப்பில் செயல்பட்டு வரும் தனியார் கட்டுமான நிறுவனத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

மேலும் மதுரை, ஈரோடு, கோவை, சேலம், விருதுநகர் உட்பட 30க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனையானது நடைபெறுகிறது. தமிழகம் முழுவதும் 30க்கும் மேற்பட்ட இடங்களில் 100க்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். இந்த சோதனையின் முடிவில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் தொடர்பான விவரங்களை வருமான வரித்துறை வெளியிடும்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal