மதுரை அமலாக்கத்துறை அலுவலகத்தில் 13 மணி நேரத்துக்கும் மேலாக நடைபெற்ற சோதனை நிறைவு பெற்றது. இந்த சோதனையில் பல்வேறு முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

திண்டுக்கல் மாவட்ட அரசு மருத்துவமனையில் மருத்துவராக பணிபுரிபவர் டாக்டர் சுரேஷ் பாபு. இவர் மீது அமலாக்கத்துறை வழக்குப் பதிவு செய்திருந்தது. இந்த வழக்கு விசாரணையும் முடிவடைந்தது. ஆனால் மீண்டும் அமலாக்கத்துறை வழக்கை எடுக்காமல் இருக்க மருத்துவர் சுரேஷ்பாபுவிடம் 3 கோடி ரூபாய் லஞ்சம் தரவேண்டும் என்று அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி பேரம் பேசியுள்ளார். இதற்கு சுரேஷ் பாபு மறுப்பு தெரிவித்துள்ளார்.

பின்னர் தனது உயர் அதிகாரிகளுடன் பேசுவதாக தெரிவித்துவிட்டு இறுதியாக ரூ.51 லட்சம் மட்டும் தந்தால் போதும் என்று கூறியுள்ளார். இதையடுத்து கடந்த நவம்பர் மாதம் முதல் தவணையாக ரூ.20 லட்சத்தை அங்கித் திவாரியிடம் ஊழியரிடம் கொடுத்துள்ளார். இதனை அடுத்து மீதமுள்ள பணத்தை தரும்படி அங்கித் திவாரி தொடர்ந்து கேட்டு வந்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் மருத்துவர் சுரேஷ் பாபு புகார் தெரிவித்தார். இந்த புகாரை அடுத்து லஞ்ச ஒழிப்பு போலீசாரின் அறிவுரையின் பேரில் ரசாயனம் தடவிய ரூ.20 லட்சத்தை அங்கித் திவாரியிடம் சுரேஷ் பாபு வழங்கினார். பின்னர், காரில் எடுத்து சென்ற அங்கித் திவாரியை லஞ்ச ஒழிப்பு போலீசார் சினிமா பாணியில் விரட்டி சென்று மதுரை- திண்டுக்கல் நெடுஞ்சாலையில் மடக்கி படித்தனர். மேலும் அவரிடம் இருந்த லஞ்ச பணத்தை கைப்பற்றி கைது செய்தனர். இதனையடுத்து திண்டுக்கல் நீதிமன்றத்தில் அங்கித் திவாரி ஆஜர்படுத்தப்பட்டு 15 நாள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டார்.

இதனிடையே மதுரையில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகம் மற்றும் அங்கித் திவாரியின் வீடு உள்ளிட்ட இடங்களில் தமிழ்நாடு லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். சோதனை நடத்திக் கொண்டிருந்தபோது, சிஆர்பிஎப் போலீசார், இரவில் பாதுகாப்புக்காக வந்தனர். ஆனால், அவர்களுக்கு தமிழக காவல் துறையால் அனுமதி மறுக்கப்பட்டது. இதனையடுத்து மதுரை அமலாக்கத்துறை அலுவலகத்தை தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்து விடிய விடிய லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர். சுமார் 13 மணிநேரம் நீடித்த சோதனையானது இன்று காலை 7 மணிக்கு நிறைவு பெற்றது.

இந்த சோதனையில் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாகவும், 3 லேப்டாப்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவிலேயே முதல் முறையாக அமலாக்கத்துறை அலுவலகத்திற்குள் நுழைந்து தமிழ்நாடு லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்தியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதற்கிடையே, அமலாக்கத்துறை அதிகாரி ஒருவர் தவறு செய்வதால் ஒட்டுமொத்த அமலாக்கத்துறையையே குற்றம் சுமத்த முடியாது என்கிறார்கள்¢ அமலாக்கத்துறை அதிகாரிகள் வட்டாரத்தில். இது அமலாக்கத்துறைக்கு வந்த வேதனை! அடுத்து, அமலாக்கத்துறை அதிகாரியை காவலில் எடுத்து விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்யலாம். அதே சமயம், தமிழகத்தில் அடுத்து அமலாக்கத்துறையின் ஆட்டமும் அதிகரிக்கும் என்கிறார்கள் விபரமறிந்தவர்கள்!

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal