சென்னையில் மழைநீர்  தேங்கியுள்ள பகுதிகளில் நோய்த்தொற்று பரவாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொது சுகாதாரத்துறை
உத்தரவிட்டுள்ளது. வடகிழக்குப் பருவமழை, காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக சென்னை உள்பட பல மாவட்டங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக நகரில் சில இடங்களில் மழைநீா் தேங்கி நோய்த்தொற்று பரவும் சூழல் உருவாகியுள்ளது. இதையடுத்து, மாநகராட்சி, மாவட்ட நிர்வாகங்களுக்கு பொது சுகாதாரத் துறை சார்பில் சில அறிவுறுத்தல்கள் விடுக்கப்பட்டுள்ளன.

இது தொடர்பாக பொது சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது:- பருவமழை காலத்தில் வெள்ளநீர்  தேங்காத வகையில் கழிவுகளை அகற்றுவது அவசியம். மழை நீா் தேக்கமடைந்த பகுதிகளில் தூய்மைப் பணிகளை விரிவாக மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக, குடிநீரில் குளோரின் கலந்து விநியோகிக்குமாறும், உணவுப் பொருள்களின் தரத்தை உறுதி செய்யுமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

வயிற்றுப் போக்கு, உணவு ஒவ்வாமை பாதிப்புகள், காலரா பாதிப்புகள் கண்டறியப்பட்டால், அது குறித்து சம்பந்தப்பட்ட தனியார், அரசு மருத்துவமனைகள் சுகாதாரத் துறைக்கு தகவல் அளிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட பகுதிகளில் மருத்துவ முகாம்களை நடத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், கொசு ஒழிப்பு நடவடிக்கைகள் மாநிலம் முழுவதும் விரிவுபடுத்தப்பட்டுள்ளன என்று அவர்கள் தெரிவித்தனர்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal