சட்டவிரோத மணல் குவாரிகள் மற்றும் விற்பனை தொடர்பான விசாரணைக்கு ஆஜராகுமாறு அமலாக்கத் துறை அனுப்பிய சம்மனை எதிர்த்து தமிழக அரசு மற்றும் 5 மாவட்ட ஆட்சியர்கள் சார்பில் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கு நவ.27-ம் தேதி விசாரணைக்கு வருகிறது.

தமிழகத்தில் உள்ள முக்கியமான மணல் குவாரிகளில் அரசு நிர்ணயம் செய்த அளவைவிட கூடுதலாக மணல் அள்ளி சட்டவிரோதமாக விற்பனை செய்ததாகவும், மணல் ஒப்பந்த குவாரிகளில் கிடைத்த வருமானம் மூலம் சட்டவிரோத பணப் பரிமாற்றங்கள் நடந்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.

இதையடுத்து, தமிழகம் முழுவதும் மணல் குவாரிகள், சேமிப்பு கிடங்குகள், குவாரி அதிபர்களின் வீடு, அலுவலகங்கள் உட்பட 34 இடங்களில் அமலாக்கத் துறை அதிகாரிகள் கடந்த செப்.12-ம் தேதி தீவிர சோதனை நடத்தினர். இதில், மணல் குவாரிகளின் மொத்த முகவராக செயல்பட்டு வந்த புதுக்கோட்டை தொழிலதிபர் ராமச்சந்திரன், திண்டுக்கல் ரத்தினம், கரிகாலன் மற்றும் நீர்வளத் துறை அதிகாரிகளின் வீடுகளில் இருந்து கணக்கில் காட்டப்படாத பல கோடி ரூபாய் மதிப்பிலான சொத்து ஆவணங்கள், ரூ.12.82 கோடி பணம்,ரூ.56.86 லட்சம் மதிப்புள்ள 1,024கிராம் தங்க நகைகள் கைப்பற்றப்பட்டதாக கூறப்பட்டது.

இதையடுத்து, 10 மாவட்ட ஆட்சியர்கள், நீர்வளத் துறை முதன்மை பொறியாளர் முத்தையா, ஓய்வுபெற்ற பொதுப்பணித் துறை பொறியாளர் திலகம் ஆகியோர் விசாரணைக்கு ஆஜராகுமாறு அமலாக்கத் துறை சம்மன் அனுப்பியது.

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத் துறை அலுவலகத்தில் நீர்வளத் துறை முதன்மை பொறியாளர் முத்தையா ஆவணங்களுடன் ஆஜராகி விளக்கம் அளித்தார்.

இந்நிலையில், 10 மாவட்ட ஆட்சியர்களுக்கு அமலாக்கத் துறை சம்மன் அனுப்பியதை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசின் பொதுத்துறை, நீர்வளத் துறை செயலர்கள், திருச்சி, கரூர், அரியலூர், தஞ்சாவூர், வேலூர் மாவட்ட ஆட்சியர்கள் சார்பில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது: மத்திய பிரதேசம், குஜராத், உத்தர பிரதேசம் போன்ற மாநிலங்களில் கனிமவள கொள்ளை தொடர்பாக ஆயிரக்கணக்கான வழக்குகள் நிலுவையில் உள்ளன. அங்கு சென்று நடவடிக்கை எடுக்காத அமலாக்கத் துறை அதிகாரிகள், தமிழகத்தில் சட்டவிரோதமாக மணல் விற்பனை செய்யப்படுவதாக கூறி அதிகார துஷ்பிரயோகம் செய்து, வரம்பு மீறி சோதனை நடத்தி நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

உள்நோக்கத்துடன், மாநில நிர்வாகத்தை சீர்குலைக்கும் விதமாக மத்திய அரசின் கைப்பாவையாக அமலாக்கத் துறை செயல்படுகிறது. குறிப்பாக, சட்டவிரோத பணப் பரிமாற்ற தடை சட்டத்தில் கனிமவளம் சேர்க்கப்படாத நிலையில், மாவட்ட ஆட்சியர்களுக்கு சம்மன் அனுப்ப அமலாக்கத் துறைக்கு அதிகாரம் இல்லை. மாநில அரசோ, புலன்விசாரணை அமைப்புகளோ, நீதிமன்றமோ உத்தரவிட்டு இருந்தால் மட்டுமே அமலாக்கத் துறையால் நடவடிக்கை எடுக்க இயலும்.

சட்டவிரோத மணல் குவாரிகள் தொடர்பாக தமிழக அரசே விசாரணை நடத்தி, நடவடிக்கை எடுத்து வரும் நிலையில், அமலாக்கத் துறையின் இந்த நடவடிக்கை தன்னிச்சையானது. கூட்டாட்சி தத்துவத்துக்கு எதிராகவும், அதிகார வரம்பை மீறியும் மாநில அரசு அதிகாரிகளை துன்புறுத்தும் நோக்கிலும் அமலாக்கத் துறை சம்மன் பிறப்பித்துள்ளது.

பாஜக ஆட்சியில் இல்லாத மாநிலங்களில், அமலாக்கத் துறையை பயன்படுத்தி இதுபோன்ற சர்வாதிகார நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. குறிப்பிட்ட குவாரிகளின் விவரம் மட்டுமின்றி, தற்போது அனைத்து மணல்குவாரிகளின் விவரங்களையும் அமலாக்கத் துறை கோரியுள்ளது.

சட்டவிரோத மணல் விற்பனை தொடர்பான வழக்கில் குற்றம் சாட்டப்படாத, வழக்கில் சாட்சியாக சேர்க்கப்படாத மாவட்ட ஆட்சியர்களை விசாரணைக்கு ஆஜராகுமாறு கூறி சம்மன் பிறப்பிக்க இயலாது. மாநில அரசின் அனுமதியின்றி அமலாக்கத் துறை மேற்கொண்டு வரும் இந்த விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும். மாவட்ட ஆட்சியர்களுக்கு அனுப்பப்பட்ட சம்மனை ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இந்த மனுக்களை அவசர வழக்காக விசாரணைக்கு எடுத்துக்கொள்ள வேண்டும் என்று, நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர், சுந்தர் மோகன் அமர்வில் தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் ஆர்.சண்முகசுந்தரம் நேற்று முறையீடு செய்தார். இதை ஏற்ற நீதிபதிகள், வழக்கை நவ.27-ம் தேதி விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக தெரிவித்துள்ளனர்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal