‘எதிரிகள் – துரோகிகளுக்கு அ.தி.மு.க.வில் இடம் இல்லை’ என முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்திருக்கிறார்.

வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ள நிலையில் மதுரையில் சாலையோரங்களில் வசிக்கக்கூடிய மக்களுக்காக மதுரை காந்தி அருங்காட்சியகத்தில் வைத்து சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் போர்வை வழங்கினார், இதனை தொடர்ந்து செய்தியாளர் சந்தித்த அவர், ‘‘ஒரு நாள் மழைக்கே தமிழகம் தத்தளித்து வருகிறது,

சாலைகள் குண்டும், குழியுமாக உள்ளது, வடகிழக்கு பருவமழை தமிழகத்திற்கு கிடைத்த கொடையாகும், எடப்பாடியார் ஆட்சிகாலத்தில் இது போன்ற காலங்களில் கண்மாய், ஏரிகள் எல்லாம் தூர்வாரப்பட்டது இதன் மூலம் நிலத்தடி நீர் உயர்ந்தது தற்போது அரசியல் காழ்புணர்ச்சி காரணமாக குடிமாரமத்து திட்டம் இரண்டு ஆண்டுகளாக முடக்கப்பட்டது, நீர் நிலைகள் தூர் வராமல் இருந்தால் மழை நீரே எங்கே சேமிப்பது?, எங்கே என கேள்வி எழுப்பினார்.

மதுரை மாவட்ட ஆட்சி அலுவலகம் மாவட்ட மக்களுக்கு பாதுகாப்பு தரவேண்டிய புகலிடமாக இருக்க வேண்டுமே தவிர திருடர்களின் புகலிடமாக மாறிவிடக்கூடாது என்று மக்கள் அச்சம் அடைந்து வருகிறார்கள்.கடந்த ஜனவரி மாதம் இலவச வேஷ்டி சேலை வைக்கப்பட்ட மாவட்ட ஆட்சியர் அலுவலக பகுதியில் தீப்பிடித்து எரிந்தது. இதில் வேட்டி சேலை முற்றிலுமாக கருகியது. இதனை தொடர்ந்து சில மாதங்களுக்கு முன்பு மாவட்ட ஆட்சியர் அலுவக மேல் தளத்தில் கணினி திருடு போய்விட்டது. தற்போது மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 12,500 வேஷ்டி சேலை திருடுபோய் உள்ளது. இது மக்கள் சொத்து, அரசின் சொத்தாகும். ஒரு அரசு சொத்தை காப்பாற்ற முடியாதவர்கள் எப்படி மக்களை காப்பாற்றுவார்கள்.

திமுகவின் 520 வாக்குறுதிகள் கடலில் கறைத்த பெருங்காயம் போல உள்ளது.கொசு உற்பத்தி, கடன் வாங்குவது, சாலை விபத்துகள் போன்றவற்றில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது. அம்மா கொண்டு வந்த அம்மா உணவகத்தை இன்று கூட பக்கத்து மாநிலங்களில் தேர்தல் அறிக்கையாக கூறப்பட்டுள்ளது. நீட் ரத்து கையெழுத்தை யாரிடம் கொடுக்க போகிறார்கள், நீட் ரத்து கையெழுத்து இயக்கம் தோழமை கட்சிகளை சமாதானம் செய்யவே நடைபெறுகிறது, திமுக இந்த இரண்டு ஆண்டுகளில் மக்களின் செல்வாக்கை இழந்து விட்டது இன்னும் 25 ஆண்டுகள் திமுக ஆட்சிக்கு வர முடியாது அந்த அளவில் மக்களின் வெறுப்பை சம்பாத்தியுள்ளது

அதிமுக பொதுக்குழுவில் நீக்கப்பட்டவர்கள் கொடி, கட்சியின் பெயரை பயன்படுத்த கூடாது, நீதிமன்றம் தெளிவாக தீர்ப்பு வழங்கி உள்ளது, நீதிமன்ற உத்தரவு பிறப்பித்தும் பூனை கண்களை மூடிக் கொண்டால் உலகம் இருண்டு விட்டது என்பதை போல ஒ.பி.எஸ் செயல்பட்டார், தொடர்ந்து லெட்டர் பேடு போன்றவற்றை பயன்படுத்தி வந்ததால் மக்கள் குழப்பம் அடைந்தனர்.

தற்போது தெளிவான தீர்ப்பை உயர்நீதிமன்றம் அளித்ததால் மக்களுக்கு தெளிவான பாதை தெரிந்துவிட்டது இன்றைக்கு நியாயம், சத்தியம் வென்றுவிட்டது தொண்டர்கள் உற்காசத்துடன் உள்ளனர். அதிமுகவை விட்டு சென்றவர்கள் மீண்டும் அதிமுகவில் இணைய அதிமுக கதவு திறந்து இருக்கும், ஆனால் எதிரிகள், துரோகிகளுக்கு அதிமுக இணைவதற்கான கதவு மூடப்பட்டுள்ளது’’ என கூறினார்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal