‘அ.தி.மு.க. பொதுச்செயலாளராக நான் இன்னும் நீடிக்கிறேன்! அ.தி.மு.க. பொதுச்செயலாளர் நான்தான்’ என சசிகலாவின் மேல்முறையிட்டில் விவாதங்கள் நடந்து முடிந்து தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் தள்ளி வைக்கப்பட்டிருக்கிறது.

அதிமுக பொது செயலாளராக இருந்த ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, கட்சியின் இடைக்கால பொது செயலாளராக அவரது தோழி வி.கே சசிகலா தேர்ந்தெடுக்கப்பட்டார். சசிகலா சிறைக்குப் போன நிலையில் நடைபெற்ற அதிமுகவின் பொதுக்குழுவில் சசிகலா மற்றும் சசிகலாவால் துணைப் பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்ட டிடிவி தினகரன் ஆகியோரை அப் பதவிகளில் இருந்து நீக்கம் செய்தும், கட்சியில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளை உருவாக்கியும் கடந்த 2017ம் ஆண்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தம்மை கட்சியில் இருந்தும், இடைக்கால பொதுச் செயலாளராக இருந்தும் நீக்கியது தொடர்பான 2017-ம் ஆண்டு அதிமுக பொதுக்குழு தீர்மானத்தை ரத்து செய்யக் கோரி சசிகலா சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு நிராகரிக்கப்பட்டது. இந்த உரிமையியல் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் சசிகலா மேல்முறையீடு செய்தார்.

சசிகலாவின் மேல்முறையீட்டு வழக்கு நீதிபதிகள் ஆர்.சுப்ரமணியன் மற்றும் என்.செந்தில்குமார் முன்பு மூன்றாவது நாளாக இன்று விசாரணை நடைபெற்றது. அப்போது சசிகலா தரப்பில் மூத்த வழக்‍கறிஞர் ஜி. ராஜகோபாலன் ஆஜராகி, கடந்த 2017ம் ஆண்டு நடைபெற்ற பொதுக்குழு கூட்டமானது சட்ட விதிகளின் படி கூட்டப்படவில்லை; அந்த கூட்டத்தில் அவர்களாகவே ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளராக தேர்வு செய்யபட்டதாக அறிவித்துக் கொண்டனர். முதல்வராக எடப்பாடி பழனிச்சாமியை தேர்வு செய்தபோது கூட எந்தவிதமான எதிர்ப்பு தெரிவிக்கவில்லை எனவும், சசிகலா தற்போது வரை அதிமுகவில் உறுப்பினராக தான் உள்ளதால் இந்த வழக்கு விசாரணைக்கு உகந்தது தான் என வாதிட்டார்.

அதிமுக மற்றும் எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் எஸ்.ஆர்.ராஜகோபால், 2017-ம் ஆண்டு நடைபெற்ற அதிமுக பொதுக்குழு உரிய விதிகளின் படி நடைபெற்ற பொதுக்குழு என உச்ச நீதிமன்றம் ஏற்கனவே உறுதி செய்துள்ளதாகவும் கட்சியின் உச்ச பட்ச அதிகாரம் கொண்ட பொதுக்குழு விதிகளின் படி கூடி தீர்மானம் நிறைவேற்றியதாகவும் எனவே இந்த வழக்கு விசாரணைக்கு உகந்தது அல்ல எனவே சசிகலா மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என வாதிட்டார். அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில், வழக்கில் தீர்ப்பினை நீதிபதிகள் தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்தனர்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal