நடிகை கவுதமியின் சொத்துக்களை ஏமாற்றியதாக கூறப்படும் அழகப்பன் வீட்டை சோதனை செய்த சி.பி.சி.ஐ.டி. போலீசார் 11 அறைகளுக்கு சீல் வைத்தனர்.

கடந்த 25 ஆண்டுகளாக பாஜகவில் இருந்து வந்தார் நடிகை கவுதமி. இவர் கடந்த 23 ஆம் தேதி பாஜகவிலிருந்து கனத்த இதயத்துடன் விலகுவதாக அறிவித்திருந்தார். மேலும் தனக்கு சொந்தமான ஸ்ரீபெரும்புதூர், ராமநாதபுரத்தில் உள்ள ரூ 25 கோடி மதிப்பிலான சொத்துகளை பாஜக நிர்வாகி அழகப்பன் கூறியதை கேட்டு ரியல் எஸ்டேட் தொழில் செய்யும் பலராமன் உள்பட இருவருக்கு பொது அதிகாரம் எழுதி கொடுத்தாராம்.

ஆனால் 25 கோடி மதிப்பிலான இடத்தை பிரச்சினை இருப்பதாக கூறி வெறும் 4 கோடிக்கு அந்த இருவரும் விற்றதாக தெரிவித்தனர். மேலும் அந்த 4 கோடி ரூபாயை கூட இரு தவணைகளாகவே செலுத்தினாராம். இந்த நிலையில் கவுதமிக்கு வருமான வரித் துறை சார்பில் வரி செலுத்தவில்லை என நோட்டீஸ் வந்துள்ளது. ஆனால் கவுதமியோ தான் விற்ற இடத்திற்கு கிடைத்த ரூ 4 கோடியில் குறிப்பிட்ட சதவீதத்தை வரியாக செலுத்திய பிறகும் அவர் இன்னும் வரி செலுத்த வேண்டும் என குறிப்பிடப்பட்டிருந்ததாம்.

இதனால் அதிர்ச்சி அடைந்த கவுதமி, நேராக ஸ்ரீபெரும்புதூர் பத்திரப் பதிவு அலுவலகத்திற்கு சென்று தான் விற்ற சொத்துகளின் விஷயங்களை கேட்டறிந்தார். அப்போதுதான் அந்த இருவரும் ரூ 11 கோடிக்கு சொத்துகளை விற்றுவிட்டு அதில் வெறும் 4 கோடியை மட்டும் கவுதமிக்கு கொடுத்தது தெரியவந்தது. இந்த பணத்தில் அழகப்பனுக்கு பங்கு போனதாக தெரிகிறது. இதையடுத்துதான் கடந்த செப்டம்பர் மாதம் சென்னை கமிஷனர் அலுவலகத்தில் அழகப்பன், அவரது மனைவி, மகன், மருமகள், அழகப்பனின் மேனேஜர் ஆகியோர் மீது புகார் அளித்திருந்தார். இந்த நிலையில்தான் கவுதமி பாஜகவிலிருந்து விலகினார். அதன்பிறகு அழகப்பன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

தலைமறைவாக உள்ள அழகப்பன் உள்ளிட்டோரை போலீஸார் தேடி வந்தனர். இந்த நிலையில் காரைக்குடி கோட்டையூரில் அழகப்பனுக்கு சொந்தமான வீடு, அலுவலகத்தில் நேற்றைய தினம் மத்திய குற்றப்பிரிவு போலீஸார் சோதனை நடத்தினர். நீதிமன்ற உத்தரவின் பேரில் 9.30 மணி நேரமாக இந்த சோதனை நடந்தது. சோதனையின் முடிவில் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து 11 அறைகள் பூட்டப்பட்டு சீல் வைக்கப்பட்டன. இதனால் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் அந்த 11 அறைகளில் என்ன இருக்கிறது என தெரியவில்லை.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal