தமிழக அமைச்சரவையில் முக்கியத்துவம் வாய்ந்த துறைகளை தன் வசம் வைத்திருந்த அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு, முதல்வரும் முக்கியத்துவம் கொடுத்து வந்த நிலையில் தற்போது சிறையில் இருக்கிறார். இந்த நிலையில்தான் மேலும் 3 அமைச்சர்களுக்கு விரைவில் சிக்கல் ஏற்படப்போகிறது என்கிறார்கள் விபரம் அறிந்தவர்கள்.

அதாவது, தமிழ்நாடு அமைச்சர்கள் பொன்முடி, கேகேஎஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு மீதான சொத்து குவிப்பு வழக்கில் தங்களது கருத்தையும் அனுமதிக்க கோரி தமிழ்நாடு பாஜக திடீரென உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்துள்ளது.

இது தொடர்பாக தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்ட அறிக்கையில், ‘‘திமுக அமைச்சர்கள் பொன்முடி, கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு மீதான ஊழல் வழக்கு விசாரணையில் தமிழக பாஜக சார்பாக உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

மூன்று அமைச்சர்களின் சொத்துக் குவிப்பு வழக்குகளில் மாவட்ட முதன்மை நீதிபதி இவர்களை விடுவித்தார். இந்தத் தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசின் ஊழல் தடுப்பு பிரிவினர் மேல்முறையீடு செய்யவில்லை. திமுக அமைச்சர்களுக்கு எதிரான இந்த சொத்துக் குவிப்பு வழக்குகள் கையாளப்பட்ட விதம் சந்தேகத்துக்கிடமாக இருப்பதால் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், இந்த வழக்குகள் தொடர்பான சீராய்வு மனு விசாரணையை தாமாக முன்வந்து எடுத்தார். இந்த வழக்குகள் கையாளப்பட்ட விதமும் தமிழக அரசின் விசாரணை அமைப்புகளின் போக்கும் அதிர்ச்சியளிப்பதாக நீதிபதி கவலை தெரிவித்திருந்தார்.

அமைச்சர் பொன்முடி தனக்கு எதிராக உயர்நீதிமன்றம் தாமாக முன்வைத்து எடுத்த இந்த வழக்கு விசாரணையை ரத்து செய்யக் கோரியும் இடைக்கால தடை விதிக்க கோரியும் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்துள்ளார். இதேபோல அமைச்சர்கள் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு ஆகியோரும் உச்சநீதிமன்றத்தை நாடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

திமுக அமைச்சர்களுக்கு எதிரான சொத்து குவிப்பு வழக்குகளை விசாரித்து தீர்ப்பு வழங்குவதற்கு முன்பு, இந்த வழக்குகளில் தமிழக பாஜக கருத்துகளை உச்சநீதிமன்றம் அனுமதிக்க வேண்டும் என கோரி பாஜக சார்பில் கேவியட் மனு தாக்கல் செய்துள்ளோம். ஊழல் அமைச்சர்களுக்கு எதிராக சட்டப் போராட்டம் நடத்தி அவர்களுக்கு சட்ட ரீதியான தண்டனை கிடைப்பதை பாஜக நிச்சயம் உறுதி செய்யும்’’இவ்வாறு அண்ணாமலை கூறியுள்ளார்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal