மகளிர் உரிமைத் தொகை ரூ.1000 யார் யாருக்கு வழங்குவது என இறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், வருகிற 11ம் தேதி முதல்வர் முக்கிய ஆலோசனை நடத்த இருக்கிறார்கள்.

பெண்களுக்கு மாதம் 1000 ரூபாய் வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் செப்டம்பர் 15ஆம் தேதி தொடங்கப்பட உள்ளது. இந்நிலையில் பயனாளர்கள் பட்டியல் இறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் முதலமைச்சர் ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில் செப்டம்பர் 11ஆம் தேதி முக்கிய ஆலோசனைக் கூட்டம் ஒன்றை நடத்த உள்ளார். ஒரு கோடி பயனாளர்கள் என்று அறிவித்த நிலையில் தற்போது அதன் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று கூறுகிறார்கள்.

மகளிர் உரிமைத் தொகை திட்டத்துக்கு நடப்பு நிதி ஆண்டுக்கு 7000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது. செப்டம்பர் முதல் மார்ச் வரை ஏழு மாதங்களுக்கு மாதம் 1000 கோடி என்ற கணக்கில் ஒவ்வொரு மாதமும் ஒரு கோடி பெண்களுக்கு மாதம் 1000 ரூபாய் வழங்க திட்டமிடப்பட்டது. இத்திட்டத்திற்கு விண்ணப்பிக்க இரண்டு கட்டங்களாக விண்ணப்ப பதிவு முகாம்கள் நடைபெற்றன. அதைத் தொடர்ந்து சிறப்பு விண்ணப்ப பதிவு முகாமும் நடைபெற்றது.

மூன்று முகாம்களிலும் சேர்த்து 1.63 கோடி விண்ணப்பங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அரசு அறிவித்த பொருளாதாரத் தகுதிகளின் அடிப்படையில் விண்ணப்பங்கள் சரிபார்க்கப்பட்டன. இதனால் சுமார் 63 லட்சம் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அரசு அறிவித்த பொருளாதாரத் தகுதிகளுக்குள் ஒரு கோடி பேருக்கும் அதிகமாக வந்துள்ளனர். தகுதியுள்ள ஒருவர்கூட விடுப்பட்டுவிடக்கூடாது என்று முதலமைச்சர் ஸ்டாலின் ஏற்கனெவே அறிவித்த நிலையில் பயனாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் சூழல் ஏற்பட்டது.

முதலமைச்சர் ஸ்டாலினும் அண்மையில் தகுதியுள்ள அனைவருக்கும் கிடைக்கும் என்று அறிவித்தார். இது குறித்து விசாரிக்கையில் முக்கிய தகவல்கள் கிடைக்கின்றன. மாவட்ட வாரியாக பயனாளர்களின் பட்டியல் தயாரிக்கப்பட்டு வரும் நிலையில் ஒவ்வொரு மாவட்டத்திலும் 20 ஆயிரம் முதல் 30 ஆயிரம் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படுகின்றன. சில மாவட்டங்களில் சற்று அதிகமாக இருக்கலாம்.

1.63 கோடி விண்ணப்பங்களில் 63 லட்சம் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தற்போது வந்துள்ள தகவல் அடிப்படையில் 13 லட்சம் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படலாம். எப்படியும் 1.5 கோடி பயனாளர்கள் சேர்க்கப்பட வேண்டும். அப்போதுதான் திட்டம் முழுமையடையும் என்று கூறுகிறார்கள். இந்த நிலையில் முதலமைச்சர் ஸ்டாலின் அமைச்சர்கள் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளார்.

செப்டம்பர் 11ஆம் தேதி திங்கள் கிழமை சென்னையில் உள்ள தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் நடத்தும் ஆலோசனைக் கூட்டத்தில் அமைச்சர் உதயநிதி, தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா, சிறப்பு திட்ட செயலாக்கத்துறைச் செயலாளர் தாரேஸ் அகமது, மகளிர் உரிமைத் தொகை திட்ட அலுவலர் இளம் பகவத் மற்றும் அதிகாரிகள், அமைச்சர்கள் கலந்துகொள்கின்றனர். அந்த கூட்டத்தில் பயனாளர்களின் இறுதிப் பட்டியல் குறித்து முக்கிய முடிவு எடுத்து அறிவிக்கப்படும். வெள்ளிக் கிழமை திட்டம் தொடங்கப்படுவதால் திங்கள் கிழமை முக்கிய அறிவிப்பு வெளியாக உள்ளது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal