ஷூட்டிங்கின் போது யானை தாக்கி உயிருக்கு போராடிய போதுகூட என் மார்பின் மீது கைது வைத்து ஒருவர் சுகத்தை அனுபவித்துக்கொண்டிருந்தார் என சீரியல் நடிகை சீரியஸாக தனது சோகக்கதையை பகிர்ந்து கொண்டிருக்கிறார்.

பாலியல் சீண்டல்கள் என்பது சினிமா நடிகைகளுக்கு மட்டுமல்லாது சின்னத்திரை நடிகைகளுக்கும் நடந்து வருகிறது. சமீபகாலமாக சின்னத்திரை நடிகைகள் ஏராளமானோர் தாங்கள் எதிர்கொண்ட அட்ஜஸ்மெண்ட் கொடுமைகள் பற்றி மனம் திறந்து பேசி வருகின்றனர். அந்த வகையில் வம்சம் சீரியலில் நடித்து பிரபலமான நடிகை சந்தியா ஜாகர்லமுடி, தனக்கு நேர்ந்த பாலியல் கொடுமை குறித்து பேட்டி ஒன்றில் கண்ணீர்மல்க பேசி இருக்கிறார்.

ரம்யா கிருஷ்ணன் நடிப்பில் சன் டிவியில் வெற்றிகரமாக ஒளிபரப்பான சீரியல் தான் வம்சம். இந்த சீரியலில் பூமிகா என்கிற கேரக்டரில் நடித்து பிரபலமானவர் தான் சந்தியா ஜாகர்லமுடி. இதைத் தொடர்ந்து சந்திரலேகா உள்பட ஏராளமான சீரியல்களில் நடித்துள்ள சந்தியா, தற்போது சின்னத்திரையில் இருந்து விலகி தெரு நாய்களை பாதுகாத்து வரும் பணியை செய்து வருகின்றார்.

இந்த நிலையில், சமீபத்தில் யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்த சந்தியா ஜாகர்லமுடி, சின்னத்திரையில் தனக்கு நேர்ந்த கசப்பான அனுபவத்தை பகிர்ந்துள்ளார். அதில் அவர் கூறியதாவது, “2006-ல் சீரியல் ஒன்றின் அறிமுக பாடல் காட்சியை கும்பகோணத்தில் உள்ள கோயிலில் படமாக்கினோம். அப்போது கோயில் யானையுடன் நடித்துக் கொண்டிருக்கும் போது, அந்த யானை திடீரென என்னை தாக்கியது. ஆனால் அந்த யானை மீது எனக்கு இதுவரை எந்த கோபமும் இல்லை.

யானை தாக்கியதால் உடம்பில் 7 இடங்களில் எலும்பு முறிவு ஏற்பட்டு, சில பாகங்களை அகற்றும் சூழல் நேர்ந்தது. யானை என்னை தாக்கியதும் பயத்தில் நான் மயக்கம் அடைந்துவிட்டேன். அதிலிருந்து நான் உயிர் பிழைத்ததே மிகப்பெரிய விஷயம். அந்த யானை என்னை தும்பிக்கையால் தான் தாக்கியது, ஆனால் அது என்மீது கால் வைத்து மிதித்தது போல இருந்தது. அந்த அளவுக்கு வலியால் துடித்தேன்.

இதையடுத்து என்னை அந்த யானையிடம் இருந்து மீட்டு சிலர் மருத்துவமனைக்கு தூக்கிக் கொண்டு ஓடினார்கள். அவர்கள் அனைவருமே என்னுடன் ஷூட்டிங்கில் பங்கேற்ற நடனக் கலைஞர்கள் தான். உயிர் போகும் அளவுக்கு வலியால் நான் துடித்துக் கொண்டிருந்தபோது கூட, என்னை தூக்கிக் கொண்டு சென்ற டான்சர்களில் ஒருவர் எனது மார்பில் கை வைத்து சுகம் கண்டு கொண்டிருந்தார்.

என் வாழ்க்கையில் நடந்த மிகவும் கசப்பான சம்பவம் என்றால் நான் அதைத் தான் சொல்வேன். அந்த டைம்ல கிட்டத்தட்ட பிணம் மாதிரி கிடந்தேன். அப்போகூடவா இப்படி செய்வார்கள். நான் சற்று மயக்க நிலையில் இருந்ததால் அந்த டான்சர் யார் என்று எனக்கு தெரியவில்லை. ஆனால் அவர் என் மார்பில் கை வைத்து தவறாக நடந்துகொண்டதை நான் உணர்ந்தேன். என் அம்மாகிட்ட கூட இந்த விஷயத்தை இதுவரை சொன்னதில்லை. அதிலிருந்து மீண்டு வர நீண்ட நாட்கள் ஆனது’’ என கண்கலங்கினார் நடிகை சந்தியா ஜாகர்லமுடி.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal