சென்னை உயர்நீதிமன்றம் இன்று பிறப்பித்த உத்தரவு, முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு சிக்கலை ஏற்படுத்தியிருக்கிறது.

அதிமுக ஆட்சி காலத்தில் சென்னை மாநகராட்சி பகுதிகளில், கடந்த 2018 மற்றும் 2019 ம் ஆண்டுகளில் சாலைகளை சீரமைக்க, 300 கோடி ரூபாய் மதிப்பிலும், மழை நீர் வடிகால் கட்டமைப்புகளுக்கு 290 கோடி ரூபாய் மதிப்பிலும், 37 டெண்டர்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. இந்த டெண்டரில் முறைகேடுகள் நடந்ததாக புகார் எழுந்தது. இந்த புகார் தொடர்பாக நீதிமன்றத்தில் அறப்போர் இயக்கமும், திமுகவும் மனு தாக்கல் செய்தது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் பி.என்.பிரகாஷ் மற்றும் ஆர்.எம்.டி.டீக்காராமன் அடங்கிய அமர்வு, டெண்டர் பணிகளில் முறைகேடு தொடர்பான புகாரில் வேலுமணி மீதான வழக்கை மட்டும் ரத்து செய்து உத்தரவிட்டது. இதனையடுத்து தங்கள் மீதான வழக்கையும் ரத்து செய்ய எம்.எஸ். கன்ஷ்ட்ரக்சென் இன்ஃப்ரா லிமிடெட், ஆலம் கோல்டு, ஆலயம் ஃபவுண்டேஷன், வைதூரியா ஹோட்டல் மற்றும் கண்ஷ்ட்ரோ மால் ஆகிய நிறுவனங்கள் மனு தாக்கல் செய்தது.

அந்த மனுவில் எஸ்.பி. வேலுமணி ஒரு பொது ஊழியர் என்பதால் அவருக்கும், தங்களுக்கும் தொடர்பில்லை என்பதால் தங்கள் மீதான வழக்குகளை ரத்து செய்ய வேண்டுமென மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டது. அப்போது ஐந்து நிறுவனங்கள் மீதான வழக்கை ரத்து செய்ய எதிர்ப்பு தெரிவித்து அறப்போர் இயக்கம் சார்பில் இடையீட்டு மனுத்தாக்கல் செய்தது.

இந்த டெண்டர் முறைகேடு வழக்கில் இறுதி விசாரணை முடிந்து குற்றப்பத்திரிகை தயாராக இருப்பதாக அரசு தரப்பில் வாதிடப்பட்டது. இதனையடுத்து ஆறு வாரங்களில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய லஞ்ச ஒழிப்பு துறைக்கு உத்தரவிட்ட நீதிபதி, டெண்டர் முறைகேடு புகார் குற்றச்சாட்டுக்கு முகாந்திரம் இருப்பதால் ஐந்து நிறுவனங்கள் மீதான வழக்கை ரத்து செய்ய முடியாது என நீதிபதி தெரிவித்தார்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal