சமீபத்தில் உதயநிதி ஸ்டாலின் ஹீரோவாக நடத்த படத்தில் ‘மாமன்னனாக’ தனது நடிப்பை வெளிப்படுத்து மக்கள் மனதில் இடம் பிடித்த நடிகர் வடிவேலு, பிரபலம் ஒருவரை ஆள் வைத்து அடித்ததாக வெளியான தகவல்தான் பரபரப்பை கிளப்பியிருக்கிறது.

நடிகர் ‘காதல்’ சுகுமார் வடிவேலு தன்னை ஆள் வைத்து அடித்த சம்பவம் குறித்து சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறி இருக்கிறார். அதில் அவர் பேசியதாவது, “கலகலப்பு படத்தில் நடிக்கும் போது வடிவேல் மாதிரியே நடிங்கனு சொன்னாங்க. நான் இல்ல சார் வடிவேல் மாதிரி நடிக்க தான் அவரு இருக்காரேனு சொன்னேன். பின்னர் ஒருவழியாக பேசி, நானும் பொன்னம்பலமும் வில்லன் மாதிரி ஒரு கேரக்டரில் நடித்தோம். அதுல கிட்டத்தட்ட வடிவேலு மாதிரியே நடிச்சேன். அந்த டைம்ல தான் வடிவேலு உடம்பு சரியில்லாம மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். அப்போ அவர் என்னை பார்க்க ஆசைப்படுவதாக முத்துக்காளையும், போண்டா மணியும் என்னிடம் வந்து சொன்னார்கள்.

ஆஹா நம்ம குருவே நம்மள பாக்கணும்னு கூப்பிடுறாரேனு ஆசை ஆசையாய் பூங்கொத்து வாங்கிக் கொண்டு ஆஸ்பத்திரிக்கு போனேன். 2001-ம் ஆண்டு இது நடந்தது. அப்போ வடிவேலுவை பார்த்து பூங்கொத்து கொடுத்து அண்ணே நீங்க தான் என் குரு, என்று பேசினேன். உடனே அவரும், ஆமாம்யா, உன்னைய பார்த்ததும் என் வயித்துல பிறந்தவன் மாதிரியே இருக்கான்னு என் ஆத்தா சொல்லும்யானு சொன்னாரு.

தொடர்ந்து பேசிக் கொண்டிருக்கும் போது போண்டா மணியையும், முத்துக்காளையையும் வெளிய அனுப்பிட்டாங்க. சரி நம்மளும் வெளிய போகலாம்னு பார்த்தா, இருங்க தம்பி பேசலாம்னு சொல்லிவிட்டு, ஏன் தம்பி ஒவ்வொரு கம்பெனியா போய் என்னமாதிரியே நடிப்பேன்னு சொல்றியாமேனு கேட்டாரு. உடனே நான், அண்ணேன் உங்கள மாதிரி நடிப்பேன்னு உலகத்துக்கே தெரியும், சினிமாவில் அப்படி பண்ணமாட்டேன்னு சொன்னேன்.

இதற்கு வடிவேலு, இல்லையே, இப்பக்கூட ஒரு படத்துல என்ன மாதிரியே நடிச்சிருக்கியாமேனு கேட்டாரு. நான், வாய்ப்பு வந்தது வேற வழியில்லாம பண்ணிட்டேன் இனிமே அப்படி பண்ண மாட்டேன்னு சொன்னேன். உங்கள மாதிரி நடிச்சு தான் தங்கச்சிய படிக்க வச்சேன்னு சொல்லிக்கிட்டு இருந்தேன். இப்படி பேசிக்கிட்டே இருக்கும்போது, என்னடா எதுத்து பேசுறனு சொல்லி, பின்னாடி இருந்து ஒருத்தர் அடிச்சாரு, இதுல கீழ விழுந்துட்டேன். அப்பறம் கொஞ்சம் அடி விழுந்தது. ஆஹா நம்மள ஏதோ பண்ண பாக்குறாய்ங்கனு தோணுச்சு. உடனே அண்ணே இனிமே எதுவும் பண்ண மாட்டேன். ஊரை விட்டே ஓடிடுறேன்னு சொல்லிட்டு வந்துட்டேன். தன் வாழ்வில் நடந்த கசப்பான சம்பவம் அது

இதையடுத்து வீட்டுக்கு வந்ததும் என் மனைவி என்னங்க அடிபட்டிருக்குனு கேட்டார். நான் வண்டில இருந்து கீழ விழுந்துட்டேன்னு சொல்லி சமாளிச்சேன். உடனே வண்டிய பார்த்துட்டு, வண்டில அடியே இல்லனு கேட்டார். நான் ஏதேதோ சொல்லி சமாளிச்சேன். பின்னர் அன்று இரவு எனக்கு தூக்கமே வரல. ஏதேதோ மண்டைக்குள்ள ஓடுது. நம்மள பாராட்டுவாங்கனு பார்த்தா இப்படி பண்ணிட்டாங்களேனு நினைச்சு, ஒருகட்டத்துல தற்கொலை செய்து கொள்ளலாமானு தோணுச்சு. உடனே என் மனைவி வந்து, உங்களை பார்த்து ஒருத்தர் பயப்படுறாருனா அவருக்கு சமமா நீங்க இருக்கீங்கனு அர்த்தம். மூட்டை பூச்சிக்கு பயந்து வீட்டை கொளுத்தக்கூடாதுனு சொல்லி எனக்கு தைரியம் கொடுத்தாங்க” என பேசி இருக்கிறார் காதல் சுகுமார்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal