ஒரு அரசியல் கட்சி வளர வேண்டும் என்றால், ஆளும் கட்சியை எதிர்க்க வேண்டும் அப்போதுதான் அக்கட்சி வளரும். ஆனால், தமிழகத்தில் நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் ஆளுங்கட்சியை குறைகளை எதிர்த்துப் பேசுவதில்லை.

காரணம், உதயநிதி ஸ்டாலினுடன் கமல்ஹாசன் மிகவும் இணக்கமாக இருக்கிறார். இந்த இணக்கத்திற்கு பிறகு தி.மு.க.விற்கு எதிராக கமல்ஹாசன் எந்தவொரு விமர்சனமும் வைக்கவில்லை.

ஏற்கனவே மக்கள் நீதி மய்யத்திலிருந்து முக்கிய நிர்வாகிகள் கட்சியிலிருந்து விலகி வருகின்றனர். இந்நிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் மாநில சிறப்புப் பிரிவின் ஒருங்கிணைப்பாளர் ரம்யா வேணுகோபால் மக்கள் நீதி மய்யம் மீது சரமாரியான குற்றச்சாட்டுக்களைக் கூறி கட்சியில் இருந்து வெளியேறி உள்ளார். ரம்யா வேணுகோபால், கடந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் மநீம சார்பாக மாநகராட்சி கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட்டவர்.

இது குறித்து அவர் தனது ட்விட்டர் பதிவில், “எங்கள் பாதைகள் இப்போது வேறுபட்டுவிட்டன. கனத்த இதயத்துடன் மக்கள் நீதி மய்யம் கட்சி உடனான எனது பயணத்தின் முடிவை அறிவிக்கிறேன். இங்கு நான் இருந்த காலம் முழுவதும், எங்கள் அன்புக்குரிய கமல்ஹாசன் அவர்களுடன் இணைந்து மக்களுக்காகப் போராடினேன்.

ஊழல் நபர்களால் மக்கள் நீதி மய்யம் கட்சி பாதிக்கப்பட்டு உள்ளது. ஊழல் நிர்வாகிகள் கொசுக்களைப் போல எங்கும் பரவி இருக்கின்றனர். அவர்கள் தனியாக கட்சிக்கு சேதத்தை ஏற்படுத்த முடியாது என்றாலும், அவர்கள் ஒட்டுமொத்தமாக இணைந்து செலுத்தும் வைரஸ் இந்தக் கட்சியை மோசமாக்குகிறது.

கட்சியின் தலைவர் கமல்ஹாசனைத் தவிர வேறு யாரும் தலைவர்கள் போல் செயல்படவில்லை. தந்திரமான நபர்களால் அவர் தவறாக வழிநடத்தப்படுகிறார். பலர் ஒன்று சேர்ந்து ஏமாற்றும்போது என்னைப் போன்ற தனிநபர்கள் இவ்வளவுதான் செய்ய முடியும். அதனால் கனத்த இதயத்துடன் மக்கள் நீதி மய்யத்தில் இருந்து வெளியேறுகிறேன்.” எனத் தெரிவித்துள்ளார்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal