பீகார் மாநிலம் கயாவில் இருந்து சென்னைக்கு வந்த ரெயிலில் முன்பதிவு செய்த பெட்டிகளில் ஏராளமான தமிழர்கள் உள்பட தென் மாநிலத்தவர்கள் பயணம் செய்தனர். வட மாநிலங்களில் செல்லும் ரெயில்களில் சாதாரண டிக்கெட் எடுத்த பயணிகளும் முன்பதிவு பெட்டிகளில் ஏறி பயணித்து மற்ற பயணிகளுக்கு இடையூறு செய்வார்கள். அதே போல் சென்னை ரெயிலிலும் பலர் ஏறி அமர்ந்து கொண்டனர்.

இதனால் முன்பதிவு செய்த பயணிகள் தூங்க முடியாமல் அவதிப்பட்டனர். உடனே அந்த பெட்டியில் பயணித்த புதுவையை சேர்ந்த கனகராஜ் என்பவர் கவர்னர் தமிழிசையை தொடர்பு கொண்டு கூறி இருக்கிறார். அது தொடர்பான வீடியோ பதிவு ஒன்றையும் அனுப்பி இருக்கிறார். உடனடியாக கவர்னர் தமிழிசை டெல்லியில் உள்ள ரெயில்வே உயர் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்து உள்ளார்.

அதிகாரிகளும் மின்னல் வேகத்தில் செயல்பட்டு சிறிது நேரத்தில் அடுத்த ரெயில் நிலையத்தில் ரெயில் நின்றதும் போலீசார் உதவியுடன் முன்பதிவு செய்த பெட்டியில் ஏறியிருந்தவர்களை கீழே இறக்கிவிட்டனர். அதன் பிறகு பயணிகள் நிம்மதியாக பயணித்தனர். உடனடியாக நடவடிக்கை எடுத்து உதவிய கவர்னர் தமிழிசைக்கு நன்றி தெரிவித்து அவர்கள் வீடியோ ஒன்றையும் வெளியிட்டு உள்ளார்கள்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal