குடிபோதையில் தகராறு செய்த விவசாயியை அவரது மனைவி, தந்தை ஆகியோர் கொலை செய்தனர். திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த சொரக்காயல்நத்தம் பகுதியை சேர்ந்தவர் சசிகுமார் (வயது 44), விவசாயி. இவரது மனைவி லட்சுமி (40). தம்பதியினருக்கு 2 பெண் மற்றும் 1 ஆண் பிள்ளைகள் உள்ளனர்.

சசிகுமார் தினமும் மது குடித்துவிட்டு வந்து மனைவி மற்றும் பிள்ளைகளிடம் தகராறு செய்து வந்தார். இதனால் கணவன் மனைவி இடையே அடிக்கடி குடும்ப பிரச்சனை ஏற்பட்டது. இந்த நிலையில் நேற்று சசிகுமார் மீண்டும் மது குடித்துவிட்டு வீட்டுக்கு வந்தார். இதனால் கணவன், மனைவி இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது.

இதனால் ஆத்திரமடைந்த லட்சுமி தனது மாமனார் சுப்பிரமணி (70) உதவியுடன், சசிகுமாரை கத்தியால் சரமாரியாக வெட்டி கொலை செய்தார். இது குறித்த தகவலறிந்த திம்மாம்பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, சசிகுமார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வாணியம்பாடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து லட்சுமி மற்றும் சுப்பிர மணியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கணவனை மனைவி கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal