உதயநிதி ஸ்டாலின், வடிவேலு, கீர்த்தி சுரேஷ் நடிப்பில் மாரிசெல்வராஜ் இயக்கத்தில் உருவான மாமன்னன் திரைப்படம் வெளியாவதற்கு முன்பே சமூகவலைதளங்களில் விவாதத்தை கிளப்பியது. வெளியான பின்னரும் விவாதங்கள் முடிந்தபாடில்லை, புதிய புதிய விவாதங்கள் படத்தை முன்வைத்தும், படத்தில் இடம்பெற்றுள்ள கதாபாத்திரங்கள், காட்சிகள் குறித்து நடைபெற்று வருகின்றன.

பார்வையாளர்களை ஈர்த்துள்ளதால் வணிக ரீதியாகவும் இப்படம் வெற்றி பெற்றுள்ளது. இத்திரைப்படத்தை பாராட்டி இயக்குநர் பா.ரஞ்சித் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.அதில், “மாமன்னன் திரைப்படம், பட்டியலின மக்களின் சட்டமன்ற உறுப்பினர்கள், சமூக நீதியை கொள்கையாக கொண்டுள்ள அரசியல் கட்சியாக இருந்தாலும், கட்சியில் உள்ள மற்ற உயர் வகுப்பினர் சாதி அடிப்படையில் ஏற்றத்தாழ்வுகளை அவர்களுக்கு எப்படி நிகழ்த்துகிறார்கள் என்பதை அப்பட்டமாக காட்சிப்படுத்தி இருக்கிறது.

உண்மையாகவே தனித்தொகுதி எம்.எல்.ஏ.க்களுக்கு அதிகாரம் என்னவாக இருக்கிறது? ஏன் பட்டியலின மக்களின் பிரச்சனைகளுக்கு குரல் கொடுக்க பயப்படுகிறார்கள்? சமூக நீதி பேசுகிற கட்சிகளில் இருந்தும் ஊமைகளாக இருப்பதற்கான காரணம் என்ன? அவர்களுக்கான அங்கீகாரமும், அதிகாரமும், பிரதிநிதித்துவமும் சரியாக தரப்படுகிறதா? என்பதற்கான சான்று மாமன்னன்.

உண்மையாகவே பெரும் பாராட்டுகுரியவர் நடிகர், தயாரிப்பாளர், அமைச்சர் திரு.உதயநிதி ஸ்டாலின். திமுக கட்சியில் இன்றுவரை பெரும் சவாலாக இருக்கும் சாதி பாகுபாட்டை அவரும் அறிந்தே இருப்பார், அதை களைவதற்கான வேலையை இத்திரைப்படத்தின் வாயிலாக ஆரம்பிப்பார் என்று நம்பிக்கை கொள்வோம்.

பொட்டி பகடை, வீராயி, ஒன்டிவீரன் என அருந்ததிய மக்களின் வாழ்க்கையின் ஊடாக மாமன்னனை உருவாக்கி பெரும் வெற்றியை பெற்ற மாரி செல்வராஜ், வடிவேலு மற்றும் குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துகள்” என்று தெரிவித்துள்ளார்.

உதயநிதியை பாராட்டியதோடு, திமுகவில் சாதிய பாகுபாடுகள் இருப்பதாக போகிற போக்கில் ஒரு குட்டு வைத்துள்ளதால் திமுக ஆதரவாளர்கள் பா.ரஞ்சித்தை விமர்சித்து வருகின்றனர்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal