‘ஆளுநர் ஆர்.என்.ரவியை மத்திய அரசு கட்டுப்படுத்த தயங்கினால், தமிழக மக்களின் கோபத்திற்கு ஆளுநர் ஆளாகிவிடுவார்’ என முதல்வர் மு.க.ஸ்டாலின் எச்சரித்திருக்கிறார்!

தமிழக அரசுக்கும் ஆளுநருக்கும் இடையே தொடர்ந்து மோதல் போக்கு ஏற்பட்டு வருகிறது. நீட் மசோதாவில் தொடங்கிய மோதல் தற்போது செந்தில் பாலாஜி அமைச்சரவை தொடர்பான பிரச்சனைகள் வரை நீண்டு கொண்டே வருகிறது.

இதனிடையே ஆங்கில நாளேடுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் அளித்துள்ள பேட்டியில், ஆளுநர் ரவி மற்றும் மத்திய அரசை கடுமையாக விமர்சித்துள்ளார். அதில், ‘‘ஒரு அமைச்சரை நியமிப்பதற்கும், அவரை பதவி நீக்கம் செய்வதற்கும் ஆளுநருக்கு எந்த அதிகாரமும் இல்லை. மத்திய அரசு அவரை கட்டுப்படுத்த தவறினால், தமிழக மக்களின் கோபத்தை அவர்கள் எதிர்கொள்ள வேண்டி இருக்கும்’’ என தெரிவித்தார். ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு மத்திய அரசு கடிவாளம் போட வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

மேலும் மத்திய அரசின் விசாரணை அமைப்புகள் மூலம் திமுக அமைச்சர்களை குறிவைத்து பாஜக செயல்படுவதாகவும் குற்றம் சாட்டினார். தேசிய முன்னணியை உருவாக்க முயற்சிப்பதால், இது போன்ற நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாக கூறிய அவர், காங்கிரஸ் இல்லாத மூன்றாவது அணி என்ற ஆலோசனையை நான் நிராகரித்ததாக தெரிவித்தார்.

காங்கிரஸையும் உள்ளடக்கிய கூட்டணியால் தான் பாஜகவை வீழ்த்த முடியும். இது பாஜகவை கோபமாக்கியதுடன், பாட்னாவில் நடைபெற்ற எதிர்க்கட்சிகளின் கூட்டம் பாஜக தலைவர்களை அச்சமடையவும் செய்துள்ளதாக கூறினார். அமலாக்கத்துறை நடவடிக்கையால் பாஜக மீதான தனது நிலைப்பாட்டை திமுக மாற்றிக்கொள்ளாது எனவும் தெரிவித்தார்.

ஆட்சியை சுமூகமாகச் செயல்பட அனுமதிக்கக் கூடாது என்பதே ஆளுநர் ரவியின் நோக்கம் எனவும் தெரிவித்தார். திமுக அரசு எந்தவித பிரச்னையும் இன்றி இயங்கக் கூடாது, மக்களுக்கான நலத்திட்டங்களை அமல்படுத்தக்கூடாது என்பது தான் ஆளுநரின் நோக்கமாக உள்ளதாக தெரிவித்தார். தமிழ்நாட்டை பல்வேறு துறைகளில் வளர்ச்சி கண்ட இரண்டாவது மாநிலமாக மேம்படுத்தியுள்ளோம். ஆளுநரால் இதை பொறுத்துக்கொள்ள முடியவில்லை எனவும் கூறினார்.நாட்டிற்கும், மக்களுக்கும், நல்லது செய்ய வேண்டும் என்ற எண்ணம் ஆளுநருக்கு சிறிதளவும் இல்லையென கூறியவர்,

அதனால் தான், தமிழக அரசுடன் காரணமே இல்லாத பல்வேறு வாதங்களில் ஈடுபட்டு வருவதாகவும் கூறினார். முதலீடுகளை ஈர்க்க வெளிநாடு சென்றிருந்த நேரத்தில், வெளிநாடு சென்றால் முதலீடுகள் கிடைக்காது என கருத்தை கூறுகினார்.

தமிழகத்தைப்பற்றி முதலீட்டாளர்கள் மத்தியில் மோசமான பிம்பத்தை ஏற்படுத்த ஆளுநர் முயற்சிக்கிறார். தமிழ்நாட்டிற்கு முதலீடுகள் கிடைக்க கூடாது, இளைஞர்களுக்கான வேலைவாய்ப்புகள் உருவாகக் கூடாது என ஆளுநர் ரவி விரும்புவதாகவும் முதலமைச்சர் ஸ்டாலின் குற்றம்சாட்டினார்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal