‘‘ எல்லா கேள்விகளுக்கும் திங்கட்கிழமை பதில் அளிக்கிறேன். அப்போது யாரும் எந்திரிச்சு ஓடிவிடக் கூடாது என பிராமிஸ் செய்ய வேண்டும்’’ என முதல்வர் விஜய் சிரித்தபடியே சபாநாயகரிடம் சொல்லிவிட்டு அவையிலிருந்து சென்றுவிட்டார்.

தமிழக சட்டசபையில் மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. அதில் இன்று காவல் துறை, தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறைகளின் மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடந்தது. அப்போது எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேசுகையில், ‘‘சட்டம் ஒழுங்கு பிரச்சினை பற்றி பேசுவதற்கு எனக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

மக்கள் பிரச்சினை குறித்து எழுப்பும் கேள்விகளுக்கு திசைத் திருப்பாமல் முதல்வர் பதிலளிப்பார் என நம்புகிறேன். மக்கள் பிரச்சினைகளை எழுப்புவதற்காகதான் மக்கள் எங்களை எதிர்க்கட்சியாக தேர்ந்தெடுத்துள்ளனர். திமுக ஆட்சியில் கொலை, பாலியல் குற்றங்கள், சாதிய பாகுபாடு கொலை பெருமளவு குறைந்திருப்பதாக காவல் துறை கொள்கை விளக்கக் குறிப்பில் நீங்களே தெரிவித்துள்ளீர்கள். அதனை ஒப்புக் கொண்டதற்கு நன்றி. தவெக அரசு அமைந்து 116 நாட்களில் புதிய திட்டங்கள் கொண்டு வந்ததை விட எங்கள் திட்டங்களைத்தான் ரத்து செய்துள்ளீர்கள். ஒன்ற பெயரை மாற்றுகிறீர்கள் அல்லது திட்டத்தையே ரத்து செய்கிறீர்கள்.

திமுக ஆட்சியில் தமிழ்நாடு டாப் கியரில் சென்று கொண்டிருந்தது. ஆனால் இந்த 116 நாட்களில் ரிவர்ஸ் கியரில் சென்று கொண்டிருக்கிறது. திமுக திட்டங்களை ரத்து செய்தது ஏன்? விவசாயக் கடன் முழுத் தள்ளுபடி, ஆண்டுக்கு 6 சிலிண்டர்கள், அனைத்து பேருந்துகளிலும் பெண்களுக்கு இலவசம் என தெரிவித்துள்ளீர்கள்.

ஆனால் வாக்குறுதிகளை முழுவதுமாக நிறைவேற்றாமல் அரைகுறையாக அறிவிப்புகளை மட்டுமே வெளியிட்டுள்ளீர்கள். தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம் எனச் சொன்னீர்கள். ஆனால் அரசின் மொத்த அறிவிப்புகளுக்கும் சேர்த்து தாய்மாமன் காது குத்தும் திட்டம் என வைத்துக் கொள்ளலாம். இந்த நிலை எப்போது மாறும் என்பதை முதல்வரின் பதிலுரையில் தெரிவிக்க வேண்டும். கடந்த ஆகஸ்ட் மாதம் மட்டும் கோவையில் 9 கொலைகள் நடந்துள்ளன. தவெக ஆட்சியில் 10 ஆணவக் கொலைகள் நடந்துள்ளன. முதலில் ஆணவக் கொலை என்றார்கள். தவெக ஆட்சியில் கவுரவக் கொலை என்றும் காதல் கொலைகள் எனவும் கூறத் தொடங்கிவிட்டனர். தவெக கட்சியை சேர்ந்தச நிர்வாகிகளுக்கு எதிரான பாலியல் குற்றச்சாட்டுகளுக்கும் புகார்களுக்கும் இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை’’ என்று எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி குற்றம்சாட்டினார்.

அது போல் ‘‘எங்கள் ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சரியில்லை, குற்றங்கள் தடுக்கப்படவில்லை என கூறும் தவெக அரசு எங்கள் ஆட்சியில் சிறப்பாக செயல்பட்ட மகேஷ் குமார் அகர்வாலை ஏன் டிஜிபியாக நியமித்தார்கள், அது போல் போதை பொருள் தடுப்பு பிரிவில் அதிகாரியாக செயல்பட்ட அமல்ராஜை ஏன் சென்னை காவல் துறை கமிஷனராக்கப்பட்டார் என்பதை முதல்வர் பதில் சொல்ல வேண்டும்’’ என உதயநிதி கேட்டுக் கொண்டார்.

அப்போது முதல்வர் விஜய் எழுந்து, ‘‘அனைத்து எம்எல்ஏக்கள் கேட்கும் கேள்விகளுக்கும் திங்கள்கிழமை நான் பதிலளிப்பேன். நான் அவையில் இல்லாவிட்டாலும் எல்லா கேள்விகளும் எனக்கு வந்துவிடும். ஆனால் நான் பதிலளிக்கும் போது யாரும் எந்திரிச்சு ஓட கூடாது என்பதை பிராமிஸ் செய்ய வேண்டும்’’ என விஜய் கேட்டுவிட்டு அவையில் இருந்து வெளியேறினார்.

ஆக மொத்தத்தில் வருகிற திங்கட்கிழமை சட்டசபையில் ‘அமளி துமளி’ இருக்கிறது..!

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal