டாஸ்மாக் வழக்கு விவகாரத்தில் ‘செந்தில் பாலாஜியைவிட செல்வாக்கு மிகுந்த நபராக கார்த்திக் உள்ளதால் அவருக்கு ஜாமீன் வழங்கினால், சாட்சிகள் வாக்குமூலம் அளிக்க தயங்குவார்கள். எனவே அவருக்கு ஜாமீன் வழங்கக்கூடாது’ என அரசு தரப்பு கடும் ஆட்சேபம் தெரிவித்திருக்கிறது.
திமுக ஆட்சியில் நடைபெற்றதாக கூறப்படும் டாஸ்மாக் முறைகேடுகள் தொடர்பாக தமிழகம் முழுவதும் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவருக்கு நெருங்கியவர்களுக்கு தொடர்புடைய 41 இடங்களில், லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் ஜூலை மாதம் 29 ஆம் தேதி ஒரே நேரத்தில் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.
முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, டாஸ்மாக் முன்னாள் நிர்வாக இயக்குநரான ஐஏஎஸ் அதிகாரி எஸ். விசாகன், டாஸ்மாக் முன்னாள் மண்டல மேலாளர்கள் ராமதுரை முருகன், பன்னீர்செல்வம், செந்தில் பாலாஜியின் உதவியாளர் பாஸ்கர், ரத்தேஷ் ராஜ், மூலனூர் கார்த்திக் ஆகியோர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்தது. இந்த வழக்கில் செந்தில் பாலாஜி முன் ஜாமீன் பெற்ற நிலையில், மூலனூர் கார்த்திக் மற்றும் அவருக்கு நெருக்கமான கரூரைச் சேர்ந்த ரமேஷ் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்புடைய டாஸ்மாக் முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கார்த்திக், ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதி வி.லட்சுமி நாராயணன் முன்பாக நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ, டாஸ்மாக் முறைகேடு வழக்கில் கைதாகியுள்ள கார்த்திக்கை லஞ்ச ஒழிப்புத் துறையினர், ஏற்கெனவே காவலில் எடுத்து விசாரணை நடத்தி விட்டனர்.
இந்த வழக்கு தொடர்பான ஆவணங்களையும் ஏற்கெனவே பறிமுதல் செய்துவிட்டனர். இந்த வழக்கில் ஒருவர் தலைமறைவாக இருக்கிறார் என்பதற்காக, கார்த்திக்குக்கு ஜாமீன் வழங்காமல் நீண்ட நாட்களுக்கு சிறையில் வைத்திருக்க வேண்டியதில்லை. எனவே அவருக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என வாதிட்டார். காவல்துறை தரப்பில் ஆஜரான மாநில தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஜான் சத்யன், இந்த வழக்கின் விசாரணை இன்னும் தொடக்க நிலையில்தான் உள்ளது. விசாரணை தொடங்கி 25 நாட்கள் ஆன நிலையில், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமான கார்த்திக்குக்கு எதிராக ஏராளமான ஆதாரங்கள் சிக்கியுள்ளன என வாதிட்டார்.
மேலும், உண்மையில் செந்தில் பாலாஜியைவிட செல்வாக்கு மிகுந்த நபராக கார்த்திக் உள்ளதால் அவருக்கு ஜாமீன் வழங்கினால், சாட்சிகள் வாக்குமூலம் அளிக்க தயங்குவார்கள். எனவே மூலனூர் கார்த்திக்குக்கு ஜாமீன் வழங்கக்கூடாது என ஆட்சேபம் தெரிவித்தார்.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி வி.லட்சுமி நாராயணன், சிறையில் உள்ள கார்த்திக்குக்கு ஜாமீன் கோரும் மனு மீதான உத்தரவை தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்தார்.
