டாஸ்மாக் வழக்கு விவகாரத்தில் ‘செந்​தில் பாலாஜியை​விட செல்​வாக்கு மிகுந்த நபராக கார்த்​திக் உள்​ள​தால் அவருக்கு ஜாமீன் வழங்​கி​னால், சாட்​சிகள் வாக்​குமூலம் அளிக்க தயங்​கு​வார்கள். எனவே அவருக்கு ஜாமீன் வழங்கக்கூடாது’ என அரசு தரப்பு கடும் ஆட்சேபம் தெரிவித்திருக்கிறது.

திமுக ஆட்சியில் நடைபெற்றதாக கூறப்படும் டாஸ்மாக் முறைகேடுகள் தொடர்பாக தமிழகம் முழுவதும் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவருக்கு நெருங்கியவர்களுக்கு தொடர்புடைய 41 இடங்களில், லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் ஜூலை மாதம் 29 ஆம் தேதி ஒரே நேரத்தில் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, டாஸ்மாக் முன்னாள் நிர்வாக இயக்குநரான ஐஏஎஸ் அதிகாரி எஸ். விசாகன், டாஸ்மாக் முன்னாள் மண்டல மேலாளர்கள் ராமதுரை முருகன், பன்னீர்செல்வம், செந்தில் பாலாஜியின் உதவியாளர் பாஸ்கர், ரத்தேஷ் ராஜ், மூலனூர் கார்த்திக் ஆகியோர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்தது. இந்த வழக்கில் செந்தில் பாலாஜி முன் ஜாமீன் பெற்ற நிலையில், மூலனூர் கார்த்திக் மற்றும் அவருக்கு நெருக்கமான கரூரைச் சேர்ந்த ரமேஷ் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

முன்​னாள் அமைச்​சர் செந்​தில் பாலாஜி தொடர்​புடைய டாஸ்​மாக் முறை​கேடு வழக்​கில் கைது செய்​யப்​பட்​டுள்ள கார்த்​திக், ஜாமீன் கோரி சென்னை உயர் நீதி​மன்​றத்​தில் மனுத்​தாக்​கல் செய்தார். இந்த மனு நீதிபதி வி.லட்​சுமி நாராயணன் முன்​பாக நேற்று விசா​ரணைக்கு வந்​தது. அப்​போது, மனு​தா​ரர் தரப்​பில் ஆஜரான மூத்த வழக்​கறிஞர் என்​.ஆர்​.இளங்​கோ, டாஸ்​மாக் முறைகேடு வழக்​கில் கைதாகி​யுள்ள கார்த்திக்கை லஞ்ச ஒழிப்​புத் துறை​யினர், ஏற்​கெனவே காவலில் எடுத்து விசாரணை நடத்தி விட்​டனர்.

இந்த வழக்கு தொடர்​பான ஆவணங்​களை​யும் ஏற்​கெனவே பறி​முதல் செய்​து​விட்​டனர். இந்த வழக்​கில் ஒரு​வர் தலைமறை​வாக இருக்​கிறார் என்​ப​தற்​காக, கார்த்​திக்​குக்கு ஜாமீன் வழங்​காமல் நீண்ட நாட்​களுக்கு சிறை​யில் வைத்​திருக்க வேண்​டிய​தில்​லை. எனவே அவருக்கு ஜாமீன் வழங்க வேண்​டும் என வாதிட்​டார். காவல்​துறை தரப்​பில் ஆஜரான மாநில தலைமை குற்​ற​வியல் வழக்​கறிஞர் ஜான் சத்​யன், இந்த வழக்​கின் விசா​ரணை இன்​னும் தொடக்க நிலை​யில்​தான் உள்​ளது. விசா​ரணை தொடங்கி 25 நாட்​கள் ஆன நிலை​யில், முன்​னாள் அமைச்​சர் செந்​தில் பாலாஜிக்கு நெருக்​க​மான கார்த்​திக்​குக்கு எதி​ராக ஏராள​மான ஆதா​ரங்​கள் சிக்​கி​யுள்​ளன என வாதிட்டார்.

மேலும், உண்​மை​யில் செந்​தில் பாலாஜியை​விட செல்​வாக்கு மிகுந்த நபராக கார்த்​திக் உள்​ள​தால் அவருக்கு ஜாமீன் வழங்​கி​னால், சாட்​சிகள் வாக்​குமூலம் அளிக்க தயங்​கு​வார்கள். எனவே மூலனூர் கார்த்​திக்​குக்கு ஜாமீன் வழங்​கக்​கூ​டாது என ஆட்​சேபம் தெரி​வித்​தார்.

இருதரப்பு வாதங்​களை​யும் கேட்ட நீதிப​தி வி.லட்​சுமி நாராயணன், சிறை​யில் உள்ள கார்த்​திக்​குக்கு ஜாமீன் கோரும் மனு மீதான உத்​தர​வை தேதி குறிப்​பி​டா​மல்​ தள்​ளி வைத்​தார்​.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal