முதல்வர் விஜய் தனது அலுவலகத்தை சென்னை சட்டசபை வளாகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையின் 10வது மாடிக்கு மாற்றி உள்ளார். அங்கு அலுவலகம் அமைப்பதற்காக ரூ.11 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிலையில் சட்டசபை செயலகத்தில் அனைத்து அமைச்சர்களின் அலுவலகங்களை புனரமைக்க முதல்வர் விஜய் தலைமையிலான தமிழக அரசு ரூ.15 லட்சம் முதல் ரூ.20 லட்சம் வரை செலவழிக்க அனுமதிக்கப்பட்டுள்ளது.
தமிழக அமைச்சரவையில் முதல்வரை சேர்த்து மொத்தம் 35 பேர் இடம்பெறலாம். இதில் ஒருவர் முதல்வராகவும், மற்ற 34 பேர் அமைச்சர்களாக இருக்க முடியும். இதில் யாரை வேண்டுமானாலும் துணை முதல்வராக நியமிக்கலாம்.
முந்தைய திமுக ஆட்சியில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராக இருந்தார். தற்போது விஜய் அரசில் யாரும் துணை முதல்வராக இல்லை. 34 பேரும் அமைச்சர்களாகவே உள்ளனர்.
முதல்வர் விஜய் தலைமையிலான புதிய அரசு அமைந்த நிலையில் அமைச்சர்களுக்கு பங்களா மற்றும் அலுவலகம் ஒதுக்கும் பணிகள் முடிவடைந்து விட்டது. தற்போது சட்டசபை செயலகத்தில் உள்ள அமைச்சர்களின் அலுவலகங்களை புனரமைக்கும் பணி தொடங்கி நடந்து வருகிறது. பொதுப்பணித்துறையின் மேற்பாரவையில் இந்த பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. முதல்வர் விஜய் அமைச்சரவையில் உள்ள 34 அமைச்சர்களின் அலுவலகங்களுமு் புதுப்பிக்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு அலுவலகத்தையும் புதுப்பிக்கவும் தலா ரூ.15 லட்சம் முதல் ரூ.20 லட்சம் வரை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. முதற்கட்டமாக இந்து அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷின் அலுவலகம் ரூ.15.93 லட்சம் செலவில் புனரமைக்கப்பட்டுள்ளது. அடுத்தடுத்து பிற அமைச்சர்களின் அலுவலகங்களை புனரமைக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.
முன்னதாக முதல்வர் விஜய் தனது அலுவலகத்தை மாற்றம் செய்துள்ளார். பொதுவாக சென்னை புனித ஜார்ஜ் கோட்டையின் முதல் தளத்தில் தமிழக முதல்வர் அலுவலகம் செயல்பட்டு வரும். தற்போது அங்கிருந்து தான் விஜய் பணியாற்றி வருகிறார். அதேவேளையில் விஜய் அந்த அலுவலகத்தை விரும்பவில்லை.
இடநெருக்கடியை காரணம் காட்டி அவர் புனித ஜார்ஜ் கோட்டையின் முதல் தளத்திற்கு பதில் அதன் வளாகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையின் 10வது மாடியில் உள்ள கூட்ட அரங்கை முதல்வர் அலுவலகமாக மாற்ற உத்தரவிட்டுள்ளார். 10வது மாடியில் உள்ள கூட்ட அரங்கை முதல்வர் அலுவலகமாக மாற்ற ரூ.11 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
தற்போது முதற்கட்ட பணிகள் தொடங்கி நடந்து வரும் நிலையில் 3 மாதத்தில் பணியை முடித்து ஒப்படைக்க முதல்வர் விஜய் அலுவலகம் உத்தரவிட்டுள்ளது. இதனால் வரும் வாரத்தில் இருந்து ஒப்பந்தாரர் மூலமாக விஜய்க்கு தயாராகும் முதல்வர் அலுவலக பணி தீவிரமாகும் என பொதுப்பணித்துறையினர் தெரிவித்துள்ளனர்.
