டாஸ்மாக் முறைகேடு வழக்கில் திமுகவைச் சேர்ந்த, முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மீது தமிழக லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிவு செய்து, அந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று மதியம் 1 மணிக்கு விசாரணைக்கு வர இருந்த நிலையில், வழக்கு விசாரணையில் இருந்து நீதிபதி வி மோகனா விலகுவதாக அறிவித்துள்ளார்.
முந்தைய திமுக ஆட்சியில் செந்தில் பாலாஜி மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சராக இருந்தார். இந்த சமயத்தில் டாஸ்மாக் மதுவிற்பனை, பார் ஒதுக்கீடு உள்ளிட்டவற்றில் பெரிய அளவில் முறைகேடு நடந்ததாக புகார்கள் எழுந்தன.
கடந்த 28 ம் தேதி செந்தில் பாலாஜிக்கு சொந்தமான வீடு, அவர் தங்கியிருக்கும் ஹோட்டல்கள் உள்பட 41 இடங்களில் தமிழக லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடியாக சோதனை நடத்தினர். அதோடு செந்தில் பாலாஜி, டாஸ்மாக் இயக்குநராக இருந்த ஐஏஎஸ் அதிகாரி விசாகன், டாஸ்மாக் அதிகாரிகள், செந்தில் பாலாஜியின் நண்பர்கள் என்று 7 பேர் மீது ஊழல் தடுப்பு சட்டம் உள்பட 11 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. செந்தில் பாலாஜி கைதாகும் நிலை வந்தது.
இதனால் செந்தில் பாலாஜி சென்னை உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்தார். அந்த மனுவை நேற்று விசாரித்த உயர்நீதிமன்றம் முன்ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தது. இதனால் செந்தில் பாலாஜி சார்பில் உச்சநீதிமன்றத்தில் நேற்று மதியம் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.
இந்த வழக்கு இன்று மதியம் 1 மணிக்கு உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி சூர்யகாந்த் மற்றும் நீதிபதி ஜோய்மால்யா பக்சி, நீதிபதி வி மோகனா அமர்வில் விசாரணைக்கு பட்டியலிடப்பட்டுள்ளது. இதற்கிடையே தான் நீதிபதி வி மோகனா, செந்தில் பாலாஜியின் முன்ஜாமீன் மனு மீதான விசாரணையில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். உச்சநீதிமன்ற நீதிபதியாவதற்கு முன்பாக வி மோகனா மூத்த வழக்கறிஞராக இருந்தார். அந்த சமயத்தில் செந்தில் பாலாஜிக்காக பிற வழக்குகளில் வாதாடி உள்ளார்.
இதனால் அவர் செந்தில் பாலாஜியின் முன்ஜாமீன் தொடர்பான வழக்கு விசாரணை அமர்வில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். இதனால் இன்றைய தினம் உச்சநீதிமன்றத்தில் செந்தில் பாலாஜியின் முன்ஜாமீன் மனு தலைமை நீதிபதி சூர்யகாந்த் மற்றும் நீதிபதி ஜோய்மால்யா பக்சி அமர்வில் விசாரிக்கப்பட உள்ளது.
