‘‘நகராட்சி துறை அதிகாரிகள் நியமன முறைகேடு தொடர்பாக வழக்குப்பதிவு செய்ய உத்தரவிடுவதற்கு முன்பு தனது விளக்கத்தை கேட்க வேண்டும் என்று கே.என்.நேரு கேட்க அடிப்படை உரிமையில்லை’’ என நேற்று சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தரப்பில் முக்கியமான வாதம் வைக்கப்பட்டது. இந்த நிலையில்தான் ஆகஸ்ட் 7ம் தேதிக்கு நீதிபதிகள் தள்ளி வைத்தனர்.

தமிழக நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில் பல்வேறு பணி நியமனங்களுக்கு ரூ.1,020 கோடி வரை லஞ்சம் பெற்றதாக திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு மற்றும் அவரது சகோதரர்கள், அரசு உயரதிகாரிகள், அரசியல் பிரமுகர்கள் உள்ளிட்டோர் மீது குற்றம்சாட்டி தமிழக டிஜிபிக்கு அமலாக்கத்துறை கடிதம் அனுப்பி இருந்தது.

இந்த கடிதத்தின் அடிப்படையில் அமைச்சர் நேரு உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்ய லஞ்ச ஒழிப்புத்துறைக்கு உத்தரவிடக் கோரி அதிமுக எம்.பி இன்பதுரை உள்ளிட்டோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்கள். இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வு, அமலாக்கத்துறை அனுப்பியுள்ள ஆதாரங்களின் அடிப்படையில் நேரு உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்ய முகாந்திரம் இருப்பதால், சம்பந்தப்பட்டவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து சட்டப்படியான நடவடிக்கை எடுக்கவேண்டுமென கடந்த பிப்ரவரி மாதம் தமிழக லஞ்ச ஒழிப்புத் துறைக்கு உத்தரவிட்டனர்.

இந்த விவகாரத்தில் நேரு நீதிமன்றத்தை நாடிய நிலையில், உயர் நீதிமன்றத்தின் இந்த உத்தரவுப்படி முன்னாள் அமைச்சர் நேரு உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்யப்படாமல் இருந்தது. இதையடுத்து தமிழக லஞ்ச ஒழிப்பு துறைக்கு எதிராக அதிமுக எம்.பி இன்பதுரை நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்திருந்தார். அந்த வழக்கில் ‘‘தி.மு.க., ஆட்சிக்காலத்தில் நகராட்சி நிர்வாகத்துறையில் உதவி பொறியாளர்கள் உள்ளிட்ட 2,538 உதவி பதவிகளுக்கான நியமனத்தில் ரூ.634 கோடி லஞ்சம் பெறப்பட்டுள்ளதாக எழுந்த குற்றச்சாட்டின் அடிப்படையில், லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்ய இந்த உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், வழக்குப்பதிவு செய்யாததால், லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்று கூறியிருந்தார்.

அதேபோல தனக்கு எதிராக வழக்குப்பதிவு செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவிட்டபோது, தன் கருத்தை கேட்கவில்லை. எனவே அந்த உத்தரவை மறு ஆய்வு செய்ய வேண்டும் என்று திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு மனு தாக்கல் செய்தார். இந்த மனுக்கள் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி, நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு தரப்பில் மூத்த வக்கீல்கள் சித்தார்த் லுத்ரா, பி.எச்.அரவிந்த் பாண்டியன் ஆஜராகி வாதிடுகையில், ‘‘கே.என்.நேரு தரப்பின் வாதத்தை கேட்காமல் வழக்குப்பதிவு செய்ய பிறப்பித்த உத்தரவு இயற்கை நீதிக்கு முரணானது. அவர் தரப்பு வாதங்களை முன்வைக்கும் உரிமையை தடுக்க முடியாது’’ என்று வாதிட்டார்கள்.

அரசு தரப்பில் ஆஜரான மூத்த வக்கீல் சித்தார்த் தவே, ‘‘முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யும் முன்பு, தீர்மானிக்கப்பட்ட குற்றம் சாட்டப்பட்டவர்கள், தங்கள் தரப்பு வாதத்தை கேட்க வேண்டும் என கேட்க எந்த உரிமையும் இல்லை. அந்த வகையில் வழக்குப்பதிவு செய்யக்கோரிய வழக்கில் தனது தரப்பு வாதத்தை கேட்க வேண்டும் என்று கே.என்.நேரு கேட்க அடிப்படை உரிமையில்லை’’ என்று குறிப்பிட்டார். தொடர்ந்து நேற்று அரசு தரப்பு வாதங்கள் முடிவடையாததையடுத்து, வழக்கின் விசாரணையை ஆகஸ்ட் 7-ந்தேதிக்கு நீதிபதிகள் தள்ளிவைத்தனர்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal