உயிரைக் காப்பாற்றிக்கொள்ள மருத்துவமனைக்குச் சென்றால், அங்கு கற்பை பறிகொடுக்கும் நிலை ஏற்பட்டிருக்கிறது. ஆம், சிகிச்சைக்கு வந்த 100க்கும் மேற்பட்ட பெண்களின் கற்பை 65 வயது மருத்துவர் ஒருவர் சூறையாடியிருக்கும் சம்பவம்தான் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

ராஜஸ்தான் மாநிலம் பார்மேர் மாவட்டத்தில், 65 வயது மருத்துவரிடம் ரூ.2 கோடி பறித்ததாக கைது செய்யப்பட்ட நர்ஸ், நீதிமன்றத்தில் ஆஜராகும் முன்பு வெளியிட்ட வீடியோவில் சில பகீர் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். அதாவது அந்த மருத்துவர் 100க்கும் மேற்பட்ட பெண்களை பாலியல் பலாத்காரம் செய்தவர் என்று குற்றஞ்சாட்டியுள்ளார்.

மருத்துவரின் அந்தரங்க போட்டோக்களை வெளியிடுவதாக மிரட்டியும், பொய் பாலியல் வழக்கில் சிக்க வைப்பதாகவும் சொல்லி அந்த நர்ஸ் ரூ.2 கோடி பறித்ததாக குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது. இது தொடர்பாக அந்த மருத்துவர் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் நர்ஸை கைது செய்தனர். விசாரணைக்கு அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீசார், நீதிமன்ற உத்தரவின்படி சிறையில் அடைத்தனர். ஆனால் நீதிமன்றத்துக்குள் செல்வதற்கு மருத்துவர் மீது பல்வேறு அதிர்ச்சி குற்றச்சாட்டுகளை அந்த நர்ஸ் முன்வைத்தார்.

அந்த வீடியோவில் அவர், ‘‘அந்த மருத்துவர் நம்பர் ஒன் பாலியல் குற்றவாளி. கடந்த பல ஆண்டுகளில் 100க்கும் மேற்பட்ட பெண்களை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். அவரது மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வந்த பெண் நோயாளிகளையும் பாலியல் ரீதியாக துன்புறுத்தியுள்ளார். மேலும், மருத்துவருக்கு எதிராக கடந்த காலங்களில் சில பெண்கள் போலீசிலும் புகார் அளித்துள்ளனர். ஆனால் பணம் கொடுத்து அந்த வழக்குகள் அனைத்தும் முடித்து வைக்கப்பட்டது.

அவர் மீதான பாலியல் வழக்குகளை மறைத்து திசைதிருப்பவே என் மீது பொய்யான புகாரை கொடுத்துள்ளனர். இதில் அவருக்கு மட்டுமின்றி வேறு சிலருக்கும் தொடர்பு இருக்கிறது. மருத்துவமனையில் பணிபுரியும் மேலும் இரண்டு ஊழியர்கள் தான் பெண்களை மருத்துவரிடம் அழைத்து செல்கிறார்கள்’’ என்றார்.

இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது. அதேநேரம் அந்த நர்ஸின் குற்றச்சாட்டுகள் எதையும் போலீசார் இதுவரை உறுதிப்படுத்தவில்லை.

மருத்துவர் அளித்த புகாரின் அடிப்படையில் இந்த வழக்கு ஆரம்பித்தது. கடந்த 2016-ம் ஆண்டு முதல் தனது தனியார் மருத்துவமனையில் இரவு நேர பணியில் நர்ஸாக வேலை செய்து வந்த அந்த பெண், தன்னை மிரட்டியதாக தெரிவித்துள்ளார். அதில் அவர், ‘‘அந்த நர்ஸ் ஒரு முறை எனது ரூமிற்கு வந்தார். அப்போது எனது செல்போனை அன்லாக் செய்து அதிலிருந்த எனது பிரைவேட் போட்டோக்களை ரகசியமாக தனது மொபைலுக்கு மாற்றிக்கொண்டார்.

அதன் பிறகு, அந்த புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிடுவதாகவும், பொய் பாலியல் வழக்கில் சிக்க வைப்பதாகவும் சொல்லி பல ஆண்டுகளாக பணம் பறித்து வந்தார். எனது நற்பெயரும், மருத்துவமனையின் மதிப்பும் பாதிக்கப்படும் என்ற அச்சத்தால் தொடர்ந்து பணம் கொடுத்து வந்தேன்’’ என்றார்.

அந்த நர்ஸ் இதுவரை ரூ.2 கோடி வரை மிரட்டி பறித்தாக அந்த மருத்துவர் புகாரளித்துள்ளார். இதில் சுமார் ரூ.35 லட்சம் மருத்துவரின் தனிப்பட்ட மற்றும் மருத்துவமனை வங்கிக் கணக்குகளில் இருந்து ஆன்லைன் மூலம் அனுப்பப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

இது மட்டுமின்றி காசோலைகள் மற்றும் வெற்று பத்திரத்தில் கையெழுத்து வாங்கி வைத்தும் மிரட்டுவதாகவும் அந்த மருத்துவர் புகாரில் தெரிவித்துள்ளார். அந்த நர்ஸ் எப்போதும் தன்னை கண்காணித்து வந்ததாகவும் மருத்துவர் குற்றம்சாட்டியுள்ளார். மருத்துவமனையில் இருந்த சிசிடிவி கேமராக்கள் மூலம் தனது அசைவுகளை தொடர்ந்து கண்காணித்ததாகவும், தனியாக ஒரு மொபைல் போன் மற்றும் சிம் கார்டு வாங்கி கொடுத்து, அதன் மூலம் திடீர் திடீரென போன் செய்து பணம் கேட்பார் என்றும் புகாரளித்துள்ளார்.

இந்த வழக்கு தொடர்பாக இப்போது இரு கோணங்களில் போலீசார் விசாரணை செய்து வருகிறார்கள். ஒருபுறம் மிரட்டி பணம் பறித்ததாக மருத்துவர் அளித்த புகாரின் அடிப்படையில் விசாரணை நடைபெற்று வருகிறது. இன்னொரு பக்கம் செவிலியர் முன்வைத்துள்ள பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டுகள் குறித்தும் போலீசார் விசாரணையை நடத்தி வருகிறார்கள்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal